ராணிப்பேட்டை,டிச.21 – தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிப்காட் தொழில் பூங்காக்களில் தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதல் படி ஒரே நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்சாலை வளாகம், பகுதி-III ல் சிப்காட் தொழில் பூங்காக்களில் வெள்ளியன்று (டிச. 20) 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். ராணிப்பேட்டை, சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 51.78 ஏக்கர் நிலப்பரப்பில் 29,267 மரக்கன்றுகள் ஏற்கனவே நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ந. சுரேஷ், சிப்காட் திட்ட அலுவலர் ப. மகேஸ்வரி, வட்டாட்சியர் அருள் செல்வம், சிப்காட் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழில் முனைவோர்கள் உள்ளிட்ட தொழிற்சாலை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.