districts

img

நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி- சட்டம், ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு டிஜிபி அறிவுறுத்தல்

நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இது தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் வருகிற நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக டி.ஜி.பி அறிவுறுத்தி உள்ளார்.