திருவள்ளூர், செப் 4- திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே கரையார் தெருவில் பழங்காலத்து மசூதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த மசூதிக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இரவு தங்கி வழிபாடு செய்து செல்கின்றனர். மசூதி நிர்வாகம் சார்பில் மசூதிக்கு வருவோர் தங்குவதற்கு வசதியுடன் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் மசூதி சுற்றுச்சுவர் அருகே பாம்பு ஒன்று ஏராளமான குட்டிகளை ஈன்று குட்டிகளுடன் நடமாடிக் கொண்டிருக்கிறது.இதனை மசூதிக்கு வருவோர் கண்டு அச்சம் கொண்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். மூன்று நாட்களாகியும் வனத்துறையினர் அந்த இடத்திற்கு வந்து சோதனை ஏதும் செய்யாமல் இருந்து வருவதாகவும் பொது மக்களின் குறைகளுக்கு செவிமடுப்பதில்லை என கூறப்படுகிறது. பாம்பு யாரையாவது கடித்து விபரீதம் ஏற்படுத்துவதற்குள் அதனை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் குழந்தைகளோடு குடும்பமாக மசூதியில் தங்குவதால் இரவு நேரத்தில் பாம்புகள் அப்பகுதிக்கு வந்து விபரீதம் ஏதேனும் ஏற்படுவதற்குள் இதனை சரி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளனர். வன உயிர்கள், பறவைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால் வனச்சரகம் மற்றும் பறவைகள் சரணாலயம் துறை அலுவலர்கள் இதனை உடனடியாக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.