புதுச்சேரி, ஏப்.15- வாகணத்தின் மீதான ஆன்லைன் அபராத கட்டண முறையை கைவிட வேண்டும் என்று அகில இந்திய சாலை போக்குவரத்து சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. அகில இந்திய சாலை போக்கு வரத்து சம்மேளனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம், புதுவையில் சனிக்கிழமை (ஏப் 15) நடைபெற்றது. கூட்டத்திற்கு சம்மேளனத்தின் தமிழ் மாநிலத் தலைவர் ஆறுமுக நயினார் தலைமை தாங்கினார். தமிழ் மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, பொருளாளர் பார்த்த சாரதி, துணைத்தலைவர் அன்பழகன், எஸ்.கே.தியாகராஜன், மூர்த்தி, துணை பொதுச் செயலாளர்கள் திரு மலை, அன்பு, துணை செயலாளர்கள் எம்.பி.மதிவாணன், ரவிச்சந்திரன், மணிபாலன், கனகராஜ், தட்சிணா மூர்த்தி, பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீர்மானங்கள் வாகனங்களுக்கான சுங்கக் கட்டண வசூலை ஒன்றிய அரசு முற்றிலும் கைவிட வேண்டும், வாகன ஓட்டுநர்களின் கையெப்பம் இல்லாமல் ஆன்லைன் அபராத முறையை செயல்படுத்தக் கூடாது. புதுச்சேரி அமைப்புசாரா தொழி லாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும், மின் வாரிய தனியார்மய நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும், மூடப்பட்டுள்ள ஏஎப்டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.