சிதம்பரம், பிப். 21- சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பொன்னந்திட்டு மற்றும் பரங்கிப்பேட்டையை இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இரு முனைகளில் போடப்பட்டுள்ள தார் சாலை குண்டும் குழியுமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. புதிதாக சாலை அமைத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததை ஒட்டி கடந்த 20 நாட்களுக்குமுன் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனையெடுத்து சிதம்பரம் வட்டாட்சியர்அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ஆழ்வார் மற்றும் கட்சியினர், கிள்ளை பேரூராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 50 நாட்களில் தார் சாலை புதிதாக அமைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன் பேரில் தார் சாலை அமைக்கும் பணி ரூ 50 லட்சத்தில் தொடங்கி முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 50 நாட்களுக்குள் பணிகளை துவக்க நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ,கிள்ளை பேரூராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வருவாய் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.