districts

img

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்

கடலூர், ஜன. 4- கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு பணி யாளர்கள் முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 45 வார்டுகளைக் கொண்ட கடலூர் மாநகராட்சியில் சுமார் 350 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். செவ்வாய்க்கிழமையன்று (ஜன.4) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு பணி மேற்கொள்வதை முன்னிட்டு நகராட்சி நிர்வாக ஆணையர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மாநகரா ட்சி அலுவலகத்திற்கு ஆய்விற்காக வந்திருந்தனர். அவர்களிடம் தங்களது குறைகளை தெரிவிக்கும் வகையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அவர்களை நகர்நல அலுவலர் ப.அரவிந்த்n ஜாதி ஒருமையில் திட்டியதோடு, அலுவலர்களை சந்திக்கவும் விட மறுத்துள்ளார். இதனைக் கண்டித்து துப்புரவு பணியாளர்கள் திடீரென நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா தனது ஆய்வினை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பினார்.  பின்னர், இணை இயக்குநர் விஜயகுமார், துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தர்னாவை கைவிட்டு கலைந்துச் சென்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் வருகையை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.