districts

திண்டிவனம் அருகே கஞ்சா பறிமுதல்

திண்டிவனம், மே 13-

     திண்டிவனம், கோட்டக்குப்பம் பகுதியில் ஒரே நாளில் மட்டும் 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும்  கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

   விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் துறை யினர் ஈ.சி.ஆர் சாலை ரவுண்டானாவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். இரு வரிடமும் 240 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் இருவரையும் கைது  செய்து, கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.

  அதைத் தொடர்ந்து ஈ.சி.ஆர் சாலை நடுக்குப்பம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து சோதனை செய்த போது, அவரிடம் 110 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. காவல் துறையினர் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

  அதேபோல் புதுவை – திண்டிவனம் புறவழிச் சாலையில்  காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை செய்த போது, அவர் பெயர் அஜித்குமார் (27) என்பதும், அவரிடம் கஞ்சா இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.