districts

img

5 அடி பள்ளமாக மாறிய நாகொண்டப்பள்ளி ஏரி சாலை

கிருஷ்ணகிரி,ஜன.12- தேன்கனிக்கோட்டை சாலை ஓசூர் வட்டத்திற்குட்பட்டது நாகொண்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தின் தெற்கு பக்கம் 6 ஏக்கர் பரப்பில் சிறிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கிழக்கு கரை மீது ஓசூர்- தேன்கனிக்கோட்டை சாலை செல்கிறது. ஒரு வழி சாலையாக இருந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 4 வழி சாலையாக  விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சாலை அமைக்கப்பட்டதிலிருந்து இருபக்கமும் அடிக்கடி தார் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறுவதும், மீண்டும் ஒட்டு போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்நிலையில், தற்போது பெய்த பெரும் மழையின்போது ஏரியின் மீதுள்ள சாலையில்  5 அடி ஆழ அகலத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. மேலும் ஏரிக்குள் அமைக்கப்பட்ட சுவர் பாதிப்படைந்து இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  இதன் காரணமாக பாலத்தில் சாலையின் மேற்குப்பகுதி  அடைக்கப்பட்டு, கிழக்கு பாதி சாலையிலேயே போக்குவரத்து நடை பெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பள்ளம் விழுந்த ஏரிக்கரை சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  சாதாரணமாகவே இந்த இடத்தில் விபத்துக்கள் அதிகம் நடந்து வருகிறது. மேலும் ஆபத்தை தவிர்க்க நாகொண்டபள்ளி பாலத்தை ஆய்வு செய்து சாலை மற்றும் சுவரையும் நெடுஞ்சாலைத்துறையும் உடனடியாக சீரமைத்து தார்சாலை அமைத்து தரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி ஓசூர் ஒன்றியச் செயலாளர் ராஜா ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.