விழுப்புரம், ஜூன் 13-
ராமாயணம், மகாபாரதம் படித்தால் பிரசவம் எளிமையாக இருக்கும் என்ற தமிழிசை சவுந்தரராஜன் கருத்து வேடிக்கையானது என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து 4 மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது பெண்கள், குழந்தை களின் நலன் மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் தகுதியான நபர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திடும் வகையில் அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.
பெண்கள், முதியோர், குழந்தைகள் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இல்லாமல் அவ்வப்போது இல்லங்களை ஆய்வு செய்து முறையாக இயங்குகிறதா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் கிராம அளவிலான குழு அமைக்க வேண்டும். செறிவூட்டப்பட்ட பிஸ்கட் தகுதியான குழந்தைகளுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, 164 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ தமிழ்நட்டில் கடந்த 2 ஆண்டுகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத, உரிய உரிமம் பெறாமல் இயங்கியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 89 காப்பகங்கள் மூடப்பட்டுள்ளது”என்றார்.
தாம்பரம், கூடுவாஞ்சேரி, திருச்சி போன்ற இடங்களில், பணி புரியும் மகளிருக்கான கட்டிடப்பணி நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக விழுப்புரத்திலும் உரிய வசதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் ராமாயணம், மகாபாரதம் படித்தால் அவர்களுக்கு பிரசவம் எளிதாக இருக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருப்பது, ஒரு மருத்துவராக இருந்து அவர் இப்படி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றும் எனவும் அமைச்சர் தெரி வித்தார்.