சென்னை, ஜூன்.5- தமிழக மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் ‘கார்டிலியா குருயிசஸ்’ என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதன்படி, சென்னை துறைமுகத்தில் இருந்து ‘எம்பிரஸ்’ எனும் சொகுசு கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 நட்சத்திர ஓட்டல் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்த சொகுசு கப்பல் 700 அடி நீளம் கொண்டது. அடுக்கடுக்காக 11 தளங்களை கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 796 அறைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வகையில் பிரமாண்டமான கலையரங்கம் உள்ளது. மேலும் 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம் (பார்), உடற்பயிற்சி கூடம் (ஜிம்), சினிமா தியேட்டர்கள், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ (சூதாட்ட கிளப்புகள்), நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, கப்பலின் ஓரம் அமர்ந்து கடல் அழகை கண்டுகளிக்கும் கூடம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன 2 பேருக்கு ரூ.40 ஆயிரம் நவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த ‘எம்பிரஸ்’ கப்பலில் பயணிப்பதற்கான கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் (2 பேருக்கு) என்றும், அதிகபட்சமாக ரூ.1½ லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டணத்துக்குள்ளேயே உணவும், தங்கும் செலவும் அடங்கும். மேலும் 2 நாட்கள், 3 நாட்கள், 5 நாட்கள் என ‘பேக்கேஜ்’ அடிப்படையிலும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இந்த ‘எம்பிரஸ்’ சொகுசு கப்பல் சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் தனது பயணத்தை தொடங்கியது. இரவில் ஒளிவெள்ளத்தில் மிதந்து செல்லும் அழகு கண்களுக்கு ரம்மியமாக இருந்தது. அதாவது கடற்கரையோரம் இருந்து பார்க்கும்போது ஒரு குட்டி நகரமே ஜொலித்தபடி மிதந்து செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் கப்பலில் ஆடல்-பாடல் போன்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் என களைகட்டிய பயணத்துடன் கப்பல் புறப்பட்டது.