districts

img

பூட்டியே கிடக்கும் ஊசி போடும் அறை

கிருஷ்ணகிரி, ஜன.22- ஓசூர் மாநகரில் இயங்கி வந்த அரசு மருத்துவமனை, 6 மாதங்களுக்கு முன்பு மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஐஎஸ்ஐ மற்றும் ஒன்றிய அரசின் சிறந்த அரசு மருத்துவமனைக்கான தரச்சான்றும் பெற்றுள்ளது. இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக வும், கடந்த 3 மாதங்களாக கடும் பனிப் பொழிவு காரணமாகவும் கூடுதாலக நோயாளிகள் தினசரி வந்து செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக வெளி நோயாளிகளை பார்ப்பதற்காக 4 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. ஓரிரு மருத்துவர்கள் மட்டுமே வருவதாகவும் புகார் எழுந்து வருகிறது.  மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும், புற நோயாளிகளுக்கு ஊசி போடும் இரண்டு அறைகளில் ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பூட்டிக் கிடக்கிறது. இதனால் பெண்கள் ஊசி போடும் அறையிலேயே அனைவருக்கும் ஒரு செவிலியர் மட்டுமே ஊசி செலுத்தும் நிலை உள்ளது. இதனால் முதியவர்கள் உட்பட அனைத்து நோயாளிகளும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை. இதுகுறித்து ஓசூர் அரசு மருத்துவ அலுவலரிடமும், அலுவலகத்தி லும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஓசூர் சார் ஆட்சியரும், மாநகர ஆணையாரும் தலையிட்டு உடனடியாக மூடிக்கிடக்கும் ஆண்கள் ஊசி போடும் அறையை திறக்க வேண்டும், கூடுதலாக செவிலியரை நியமிக்க வேண்டும், மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, தலைவர் வெண்ணிலா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.