districts

img

தூய்மை பணியாளர் துயர் துடைக்கும் அரசாணைகளை அமல்படுத்த வேண்டும் - ஏ.ஜி.சந்தானம்

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் சுகாதாரத்தை  பராமரிக்கும் தூய்மை பணியாளர் நிலையோ பரிதாபமாக உள்ளது. தமிழகத்தில் 12,524 கிராம ஊராட்சிகளில் அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் விநியோகம், சுகாதாரம் போன்ற ஆக்கபூர்வமான பணிகளை செய்து வரும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி இயக்குநர்கள், தூய்மை பணிபுரிவோர்கள், டிபிசி பணியாளர்கள்,  பள்ளி தூய்மை பணியாளர்கள் என சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தவருகிறார்கள். இவர்கள் மிக மிகக் குறைவான ஊதியத்தில், அதாவது ரூ.1000  முதல் ரூ.9000 வரை மாத ஊதியமாக பெற்று சேவை மனப்பான்மையுடன் பணிசெய்து வருகிறார்கள். நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதற்கு அடிப்படை காரணம் உள்ளாட்சி ஊழியர்களின் கடும் உழைப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் துறையாக உள்ளாட்சித் துறை உள்ளது. இத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பல்வேறு அரசாணைகளை தமிழ்நாடு அரசு அவ்வப்போது வெளியிடுகிறது. ஆனால் அந்த அரசாணைகள் தொழிலாளர்களுக்கு பாதகம் என்றால் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. தொழிலாளர்களுக்கு சாதகம் என்றால் கண்டு கொள்ளாமல் இருப்பது அரசின் கொள்கையாகமாறிவிட்டது வருந்தத்தக்கது. கொரோனா கால ஊக்கத்தொகை அரசாணை 2019 முதல் 2022 வரை கொரோனா தடுப்பு பணியில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டேங்க் ஆப்பரேட்டர் கள்,  டிபிசி பணியாளர்கள் என ஊராட்சிகளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மிகக் கடுமையாக பணியாற்றினார்கள். இவர்களின் பணிகளை தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் பாராட்டியது. மேற்கண்ட தொழிலாளிகளுக்கு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசாணை எண் 256 நாள் 28 .5. 2021 அன்று ரூபாய் 15,000 ஊக்கத்தொகை என அரசாணை வெளியிட்டது.  மூன்று ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் இதுவரை இந்த ஊழியர்களுக்கு ஓரு ரூபாய் கூட வழங்கப்படவில்லை. மிக மிகக் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கிடவேண்டும். மாதமாதம் 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்கின்ற அரசாணை 89,  2015 ல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அரசாணையை இன்று வரை  அமலாக்கிட அரசு மறுத்து வருகிறது. 

சம்பளத்தை வழங்காமல் நிலுவையில் வைக்கலாமா?

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மாதம் முதல் 40 மாதம் வரை உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஊதிய பாக்கி உள்ளது.  மிக மிகக் குறைந்த ஊதியம் பெறும் இந்த  ஊழியர்களுக்கு 40 மாதம் வரை ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு போட்ட உத்தரவை அரசே மீறுகிறது.  10 ஆண்டுகளுக்கு  ஒரு முறை ஊதியக்குழு, ஊதியத்தை தீர்மானிக்கும்.  கடந்த 60 ஆண்டுகளில் 6 முறை ஊதிய குழுக்கள் ஊதியத்தை உயர்த்திய பின்பும்,  உள்ளாட்சித் தொழிலாளர்கள் ரூ. 1000 முதல் ரூ.9000 வரை தான்  ஊதியம் பெறுகிறார்கள். 7-வது ஊதியக்குழு அரசாணை 303/  நாள் 11. 10. 2017 திருவள்ளூர் மாவட்டத்தில் 50 விழுக்காடு அமல்படுத்தவில்லை. சிஐடியு-ன்  கடுமையான போராட்டத்திற்கு பிறகு தான்,  50 சதவீதம் தொழிலாளர்கள் 7-வது  ஊதிய குழுவின் பலனை அனுபவித்தனர். 2026 - ல் 8 வது ஊதியக்குழு வர உள்ளது. அதற்குள் தமிழக அரசு போதுமான நிதியை ஒதுக்கி 2 லட்சம் ஊழியர்களின் வாழ்க்கையை பாதுகாத்திட வேண்டும். 

பணிநிரந்தரம் அரசாணையும் அமலாகவில்லை

தமிழக முழுவதும் ஊராட்சிகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்து,  சிறப்பு கால முறை ஊதியம் தர வேண்டும் என அரசாணை 385ஐ 1.10. 2010ல் அரசு வெளியிட்டது.  மேற்கண்ட அரசாணை அடிப்படையில் ஓஎச்டி  (மேல்நிலை நீர்தேக்க தொட்டி),  ஆபரேட்டர்கள் சுமார் 75,000 பேர் , தூய்மை காவலர்கள் 66,039 பேர்,  டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர் 40,000 பேர் என சுமார் 1.75 லட்சம் பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் அந்த அரசாணையும் அமலாகவில்லை. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிபடி 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 

குறைந்தபட்ச ஊதியக்குழு அரசாணை  2D (62)     

உள்ளாட்சித் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 1977 க்கு பிறகு (40 ஆண்டுகளுக்கு பிறகு) குறைந்தபட்ச ஊதியம் குறித்த அரசாணை எண் 2d 62, நாள் 11.10.2017 அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை மூலம் வெளியிடப்பட்டது.  மேற்கண்ட அரசாணைகளை செயல்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேற்கண்ட துறையின் மூலம் அரசாணை 2d 36,  நாள் 16 .6. 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் கடந்த அரசாணையில் நிர்ணயித்த ஊதியத்தை விட  ரூ.6.25 பைசா வரை குறைத்து ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும்.  எனவே இந்த அரசாணையை எதிர்த்து சிஐடியு,  உள்ளாட்சி ஊழியர் சங்கம் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததன் அடிப்படையில்,  இந்த அரசாணை 36 நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக தற்போது அரசாணை 2d 62 அமலாக்கிட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை அடிப்படையில் தான் தற்போது டேங்க் ஆபரேட்டர்களுக்கு 14 ஆயிரத்து 593 ரூபாய் தூய்மை பணியாளர்கள்,  தூய்மை காவலர்களுக்கு ரூ.12, 593, டெங்கு மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊராட்சிகளில் தினக்கூலியாக  ரூ.533 என ஊதியம் தரவேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டும்  இதுவரை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே தமிழக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். 

கூடுதல் பணியாளர் நியமனம் வாரிசு வேலை அரசாணை  

ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களின் இறப்பு, பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் சுமார் 20,000 மேற்பட்ட காலி பணியிடங்கள் ஊராட்சிகளில் உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பிட தமிழக அரசு ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை மூலம் அரசாணை  129 வெளியிட்டுள்ளது இதன் அடிப்படையில் தூய்மை பணியாளர்களை நியமிக்கவும், ஒஎச்டி ஆபரேட்டர்களை  பணி  நியமனத்திற்கு 10.5. 2000 - ல் போடப்பட்ட தடையானையை ரத்து செய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். தொழிலாளர்களின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  குளறுபடியான ஊதிய உயர்வு அரசாணை கடந்த 2022 மார்ச் 16 ஆம் தேதி சட்டமன்றத்தில்  தமிழக முதல்வர் ஒஎச்டி  ஆபரேட்டர்களுக்கு  ஊதியம் ரூ.1400 உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்தார். இதற்கான அரசாணை எண் 20. நாள் 4.2.2021 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உத்தரவு மூலம்  வெளியிடப்பட்டது. இது ஏற்கெனவே பெற்று வந்த சிறப்பு படி மற்றும் அகவிலைப்படி உள்ளிட்ட தொகைகள் சேர்க்கப்படாமல் அரசாணை வெளியிட்டதால் அவர்கள் ஏற்கனவே  பெற்று வரும் ரூ.4000 ஊதியத்தை விட குறைவாக பெறும் நிலை உள்ளது. எனவே இந்த அரசாணையில் உள்ள குளறுபடிகளை சரி செய்து ரூ. 1400 ஊதிய உயர்வை டேங்க் ஆபரேட்டர்களுக்கு 1.4.2020 முதல் நிலுவைத் தொகையாக கிடைக்க அரசாணையில் திருத்தம் செய்து அரசு வெளியிடவேண்டும். வேலைவாய்ப்பை பறிக்கும்  அரசாணையை ரத்து செய்க அரசாணைகள் அனைத்தும் மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்தது.இதை தொழிலாளர்கள் நலன் கருதி முழுமையாக அமலாக்கிடவேண்டும்.  உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பை பறித்து தனியார்மயமாக்கும் அரசாணைகள் 10, 139, மற்றும்  152 ஆகிய அரசாணைகளை உடனடியாக ரத்து செய்து  உள்ளாட்சித்துறை ஊழியர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிட வேண்டும் என ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம்  (சிஐடியு), தமிழக அரசை வலியுறுத்துகிறது.