சென்னை, ஜன. 13- வடசென்னையின் வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பிரத்தியேக கொள்கையை அறிவிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்து அரசு நிர்வாகங்கள் வடசென்னையில் மேற்கொண்ட திட்டங்கள் எதுவும் தேவையான அடிப்படை மாற்றத்தை இதுவரை உருவாக்கவில்லை. 1975இல் “சென்னை பெருநகர முதன்மை திட்டம்” என்ற பெயரில் 1ஆவது மாஸ்டர் பிளானும், 2008இல் 2ஆவது மாஸ்டர் பிளானும் உருவாக்கப்பட்டு படாடோ பமாக அறிவிக்கப்பட்டன. இப்போது சென்னை பெருநகருக்கான 3ஆவது மாஸ்டர் பிளான் தயாராகிக் கொண்டு இருப்பதாக சமீபத்தில் தங்களின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிபந்தனைகளை ஏற்காதீர்...
சென்னை நகருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் சென்னை பெருநகர கட்டமைப்புகளை உலகத்தரத்தில் மாற்றப்போவதாக தெரிவித்தன. ஏற்கனவே போடப்பட்ட 2 மாஸ்டர் பிளான்களும் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருந்தாலே ஓரளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இந்த திட்டங்கள் குறித்தும் இவைகள் அமலாக்கப் பட்டது குறித்தும் ஒரு நேர்மையான ஆய்வு இதுவரை நடத்தப்படவில்லை. இப்படிப்பட்ட ஆய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படாமலேயே 3ஆவது மாஸ்டர் பிளான் அறிவிப்பு, சென்னை நகரின் கட்டமைப்பில் மாற்றத்தையும், வளர்ச்சியையும் ஏற்படுத்துமா என்கிற கேள்வி எழுகிறது. எனவே கடந்த 2 மாஸ்டர் பிளான்கள் அமலாக்கம் பற்றி ஸ்தூலமான ஆய்வுக்கு உட்படுத்தி அதனடிப்படை யில் 3ஆவது மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டும். நகர்ப்புற மேம்பாடு என்ற பெயரில் உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து அரசு மிகப் பெரிய தொகையை கடனாக பெறும்போது, களத் தேவைகளுக்கு பொருந்தாத திட்டங்களை அமலாக்க விதிக்கும் நிபந்தனைகளை அரசு ஏற்கக் கூடாது
சிறப்பு திட்டத்தை உருவாக்குக !
சென்னை பெருநகர் பகுதியின் மக்கள் தொகை ஒரு கோடியை எட்டும் அளவிற்கு அதிகரித்துள்ளது. வேறு மாநிலங்களில் இருந்தும், நமது மாநிலத்திற்கு உள்ளேயே வெளி மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு இடம் பெயர்வது அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய ஏற்றுமதி மையங்களில் ஒன்றாக சென்னை உள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் மையப்பூங்காவாகவும் சென்னை மாறியுள்ளது. ஸ்மார்ட் சிட்டியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம், சென்னையை நோக்கி எதிர்பாராத அளவு இடம் பெயர்தல் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்கக் கூடிய சிறப்பு திட்டத்தில், வடசென்னையின் தேவையை அறிந்தும், உணர்ந்தும் ஒரு பிரத்தியேகமான வளர்ச்சிக் கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். சென்னை பெருநகர மக்கள் தொகையில் 69.5 சதம் பேர் (15 முதல் 60 வயது வரை) வேலை செய்வதற்கு தகுதியானவர்கள். இந்த தகுதியானவர்களில் 48.43 சதம் பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என 2ஆவது மாஸ்டர் பிளான் தெரிவிக்கிறது. ஆக நகர வளர்ச்சித் திட்டம் என்பது வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குடிநீர், கல்வி, மருத்துவம், சுகாதாரம், போக்குவரத்து, தரமான சாலைகள், வெள்ளப்பெருக்கு, மழை நீர், கழிவு நீர் வெளியேற்றம் என அனைத்தையும் உள்ளடக்கிய நிலையான உள்கட்டமைப்பு வளர்ச்சியாக இந்த சிறப்பு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். களத்தில் நின்று பணியாற்றும் அமைப்பு என்ற முறையில் “சென்னைக்கு என பிரத்தியேக வளர்ச்சிக் கொள்கைகளை உருவாக் கும் போது” கீழ்க்கண்ட அம்சங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
ராயபுரத்தில் 3ஆவது ரயில்வே முனையம்
சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேசன்கள் போன்று ராயபுரத்திலும் 3ஆவது ரயில் முனையம் அமைக்க வேண்டும். தென்னிந்தியாவின் முதல் ரயில் 1856லேயே ராயபுரத்தில் இயக்கப்பட்டது என்பதை யும் கவனத்தில் கொள்ள வேண்டும். விரைவு ரயில்கள் பெரம்பூரிலும், மாம்பலத்திலும் நின்று செல்வதைப் போன்று திருவொற்றியூரிலும் நின்று செல்ல வேண்டும். திருவொற்றியூர், மாதவரம் ஆகிய இரு முனைகளில் இருந்து எண்ணூர் வரையிலும், செங்குன்றத்திலிருந்து வள்ளலார் நகரை இணைக்கும் வகையிலும் மெட்ரோ ரயிலை விரிவுபடுத்த வேண்டும்.
சிறு குறு தொழில்களுக்கு ஊக்கம்
2,124 குறுந்தொழில் பட்டறைகளும், 935 நடுத்தர, சிறு தொழில் நிறுவனங்கள் என 1,200 ஏக்கர் பரப்பளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளது. வியாசர்பாடி எஸ்டேட் மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை களும் உள்ளன. அதுமட்டுல்லாமல் குடிசைத்தொழில் போன்று பல்வேறு வகையான குறு தொழி ல்கள் பரவிக்கிடக்கி ன்றன. இத்தகைய சிறு, குறு தொழில்களுக்கு அரசு ஊக்கமளித்து வளர்த்திட வேண்டும். அத்துடன் அம்பத்தூர் தொழிற்பேட்டையினரின் நீண்ட கால கோரிக்கையான ஒரு குறுந்தொழில் வளாகம் அம்பத்தூரில் அமைத்திட வேண்டும். நடைபாதை மற்றும் சிறு வியாபாரம் செய்வோரின் தொழிலை சுய தொழி லாக அரசு அங்கீகரித்து, உரிம அட்டை வழங்க வேண்டும். நகரத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கும்போது இந்த நலிந்த மக்களின் சுய தொழிலுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் வியாபார ஸ்தலத்தை பாதுகாக்க வேண்டும்.
ஆலை மாசுவை கட்டுப்படுத்திடுக !
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் மாசுக்கள் பெரும் பாதிப்பை உருவாக்குகின்றன. மணலி மற்றும் சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் பயன்படுத்தப்பட முடியாத உயிர்கொல்லியாகி விட்டது. ஆஸ்துமா, நுரையீரல், புற்றுநோய், இதய பாதிப்பு, மூச்சுவிடுவதில் சிரமம், குறை பிரசவம் போன்ற மகப்பேறு பிரச்சனைகளை உருவாக்கும் மாசை கட்டுப்படுத்த வேண்டும். இந்த பகுதிகளில் துகள் மாசை கண்டறியும் நிலையங்களை அதிகப்படுத்த வேண்டும். தற்போதுள்ள மாசு அளவிடும் கருவி பழுதடைந்து கண்காணிப்பின்றி உள்ளது. மாசற்ற நகரமாக வடசென்னையை மேம்படுத்த வேண்டும். கொடுங்கையூர் குப்பைமேடு வளாகம் சுவாச நோய், சரும நோய்களின் உற்பத்தி மையமாகவும், உறைவிட மாகவும் மாறி வடசென்னையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க உரிய மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குடிநீர் குழாய் மறுகட்டுமானம் அவசியம்
சமதள பகுதியான சென்னையில் கழிவுநீர் செல்லும் குழாய்கள், மழைநீர் கால்வாய்கள் என இரண்டு வடிகால் அமைப்புகள் உள்ளன. பல பத்தாண்டுக ளுக்கு முன்பு அன்றைய மக்கள் தொகைக்கேற்ப அமைக்கப்பட்ட இந்த வடிகால்களில் பெரும்பகுதி சிதைந்து, சேதாரமாகி விட்டது. இதனால் குடிநீருடன், கழிவு நீரும் கலந்து குடிக்க தரமற்றதாகி விடுகிறது. அத்துடன் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பை உருவாக்குகிறது. கழிவுநீர் குழாய்க ளையும், மழைநீர் வடிகால்களையும் இன்றைய தேவைக்கு ஏற்ப நவீன மறு கட்டுமானத்திற்கு திட்டமிட வேண்டும். கொசஸ்தலை ஆறு வடிநில பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் 2800 கோடி செலவில் உலகத் தரத்தில் வடிகால் அமைக்கும் பணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது நடைபெற வில்லை என்பதையும் கணக்கில் கொண்டு, அரசு இந்த நவீன மறு கட்டுமானத்திற்கு திட்டமிட வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு உள்ளது போல், குடிநீர் இணைப்பை ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்கிடும் வகையில் குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கும் திட்டத்தை அரசு உருவாக்க வேண்டும். பெரு நகரங்களில் தினசரி ஒருவருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும் என்ற மத்திய பொது சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, தரமான குடிநீரை உத்தரவாதப்படுத்த வேண்டும். மழை நீர் சேகரிப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றி நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும். சென்னையின் மையமாக இருந்த சட்டக்கல்லூரி இடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. சென்னை நகர்ப்புற மாணவர்கள் சட்டம் பயில வடசென்னையில் ஒரு சட்டக்கல்லூரி துவங்க வேண்டும். அம்பத்தூர், மாதவரம், திரு.வி.க. நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்கவும் மற்றும் மாநகராட்சி அரசு பள்ளிகளை மேம்படுத்தவும் வேண்டும்.
பொது மருத்துவமனைகள்
பொது மருத்துவம் இன்னும் எளிதில் மக்க ளுக்கு கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் வகையில், ஸ்டான்லி மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை போன்று மாதவரம் பகுதியில் புதிதாக அரசு மருத்துவ மனையை, அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைத்து உருவாக்க வேண்டும். அதேபோல் தேர்தல் அறிக்கை யில் தாங்கள் சென்னைக்கான திட்டத்தில் அறிவி த்துள்ள பெரம்பூரில் தாய்-சேய் நல மருத்துவமனை யையும், கோட்டத்திற்கு ஒரு ஆரம்ப சுகாதார மையத்தை யும் அமைக்க வேண்டும். மக்கள் தாங்களாகவே அமைத்துக் கொண்ட குடியிருப்பு மனைகளை முறைப் படுத்தி, அங்கீகரித்து, மேம்படுத்துவதே அனை வருக்கும் வீடு வழங்கல் கொள்கையின் முக்கிய குறிக்கோள் என்று அரசு அறிவிக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் வகைப்படுத்து வதற்கும், முறைப்படுத்துவதற்கும் வாய்ப்பிருக்கும் குடியிருப்புகளை இடித்துத் தள்ளுவதை அரசு ஏற்காது என்று அறிவிக்க வேண்டும்.
சமூக கடமைகளை நிறைவேற்றுக !
குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு களில் கூடுதல் தளங்களை உருவாக்குவதால் மட்டுமே அனைவருக்கும் வீடு வழங்கல் சாத்தியமாகாது. நகரின் கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்களின் ஒரு அடிப்படைக் கூறாக அனைத்து வகையான குடியிருப்புகளையும் வகைப்படுத்தி பட்டா வழங்குவது ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தை தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றம் செய்துள்ளது. குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைத்து விடக்கூடாது. குடியிருப்புக்கு பயனாளிகளின் பங்களிப்பு, “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” என்ற முறையில் பராமரிப்புக்கும் பயனாளிகளின் பங்களிப்பு என்று அரசு தனது சமூக பாதுகாப்பு கடமைகளில் இருந்து ஒதுங்கி விடக்கூடாது. அனைவருக்கும் வீடு என்பதை மக்களின் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.
எண்ணூர் துறைமுகத்தை பாதுகாத்திடுக !
இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தாலே வடசென்னை வெள்ளத்தில் மிதக்கும் நிலை உள்ளது. இம்முறை மழையின் போது பூண்டி ஏரியிலிருந்தும், புழல் ஏரியிலிருந்தும் திறந்து விடப்பட்ட உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் இணைந்து எண்ணூர் முகத்து வாரம் வழியாக கடலில் கலந்தது. வடசென்னையின் வரத்து கால்வாய்களிலிருந்து வெளியேறிய மழைநீர் பக்கிங்காம் கால்வாயில் இணைந்து எண்ணூர் முகத்துவாரம் வழியாக கடலில் கலந்தது. இந்த மொத்த நீரையும் உள்வாங்க முடியாமல் மணல் திட்டுகளால் அடைபட்டு கிடக்கும் முகத்துவாரம் திணறியது. ஏற்கனவே அரசு திட்டமிட்டபடி முகத்துவார மணல் மேடுகளை அகற்றி 141 கோடி ரூபாயில் இருபுறமும் காங்கிரீட் நட்சத்திர கற்களைக் கொண்டு தூண்டில் வளைவு அமைக்கப் பட்டிருந்தால் மூன்று மடங்கு உபரி நீர் கடலில் வெளியேறி இருக்கும். என்ணூர் முகத்துவாரத்தை பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக முக்கியமானது என்பதை உணர்ந்து உடனடியாக பணிகளை துவங்க வேண்டும்.
ஆறுகளில் தூர்வாரி பராமரித்திடுக !
கொசஸ்தலை ஆறும் உபரிநீர் திறப்பால் திணறி யது. உபரி நீரால் ஆறு நிரம்பும்போது ஆற்றையொட் டியுள்ள பரவல் நிலங்களில் தண்ணீர் பாயும். இந்த ஆற்றின் பரவல் நிலங்கள் 8000 ஏக்கர் ஆகும். வடசென்னை ஊர்களுக்குள் வெள்ளம் நுழையாமல் தடுப்பது இந்த பரவல்தான். இந்த ஈர்நிலப் பகுதியில் எந்தவிதமான கட்டுமான பணிகளும் நடைபெறக் கூடாது என்று 1996 - கடற்பகுதி ஒழுங்காற்று ஆணைய அறிவிக்கையை பொருட்படுத்தாமல் 1,090 ஏக்கரை ஆக்கிரமித்து துறைமுகம் கட்டியது மத்திய அரசு. கார்கள் ஏற்றுமதி வளாகம் அமைக்க கூடுதலாக 1000 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டது. வட சென்னை, வள்ளூர், எண்ணூர் அனல்மின் நிலையங்களின் சாம்பல் கழிவுகளை கொட்டிட மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்கின்றனர். ஒருபுறம் முகத்துவாரம் அடைபட்டுக் கிடப்பதாலும், மறுபுறம் பரவல் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாலும் ஆற்றில் கலந்த உபரிநீர் பின்னோக்கி திரும்பியது. மணலி, மணலி புதுநகர், சடையங்குப்பம், திருவொற்றியூர் மேற்கு பகுதியில் கார்கில் நகர், ராஜாஜி நகர், சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட வட சென்னையின் பல பகுதிகள் கடுமையாகப் பாதித்தன. எனவே வட சென்னையின் உயிர் நதி கொசஸ்தலையை பாதுகாப்ப தும், பரவல் என்கிற ஈர்நிலங்கள் ஆக்கிரமிப்பை தடை செய்வதும் வட சென்னை மக்களை வெள்ளப் பெருக்கில் இருந்து காப்பாற்றும் வழியாகும். அத்துடன் வட சென்னையின் வரத்து கால்வாய்களை தூர் வாரி நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். சென்னை யின் மூன்று ஆறுகளையும் (கொசஸ்தலை, கூவம், அடையாறு) இணைக்கும் நீர்வழியான பக்கிங்காம் கால்வாயை நிரந்தரமாக பராமரிக்கவேண்டும். குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம், கூவம் நதியை தூய்மை நதியாக மாற்றிட சாத்தியமான திட்டத்தை உருவாக்க வேண்டும். உழைக்கும் மக்களின் வியர்வை பூமி வடசென்னை. சென்னை பெருநகரின் ஒட்டுமொத்த வளர்ச்சியோடுதான் வடசென்னையின் வளர்ச்சியும் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் அரசு நிர்வாக திட்டங்களில் வடசென்னை புறக்கணிக்கப்படுவது தொடர் நிகழ்வாக கடந்த காலங்களில் நடந்திருக்கிறது. எனவே சென்னை பெருநகரத்திற்கான கட்டமைப்பு, வளர்ச்சி திட்டங்களில் வடசென்னை வளர்ச்சிக்கென ஒரு பிரத்தியேக கொள்கையை அரசு உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.