districts

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து 356 கனஅடியாக அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை,ஜூன் 18-

     கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த மாதம் 1-ந் தேதிமுதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா தண்ணீரை அதிகமாக பயன்படுத்தியதால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து குறைந்து இருந்தது. இந்த நிலையில் ஞாயிறன்று காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோபாயிண்டிற்கு நீர்வரத்து 356 கன அடியாக அதிகரித்து உள்ளது. பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 330 கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 27 .62 அடியாக பதிவானது.1.263 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு 13 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.