பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைக்க வேண்டும், சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன்று (பிப்.14) தமிழகம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக வடசென்னை மாவட்டம் சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்திலும், தென்சென்னை மாவட்டம் சார்பில் நந்தனம் சம்பள கணக்கு அலுவலக வளாகத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட செயலாளர் துரை.மருதன் சங்க நிர்வாகிகள் வே.லெனின், எம்.ஆர்.திலகவதி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.