சென்னை, ஜன.25- தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கொரோனா தொற்று தற்போது உச்சத்தில் இருப்பதாலும்,தேர்தல் நடத்தினால் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையை எட்டும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முனீஸ்வர்நாத் பண்டாரி, பி.டி.ஆதிகேசவலு அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், மாநில தேர்தல் ஆணையம் நான்கு மாதங்களுக்குள் தேர்தலை ஜனவரிக்குள் அறிவிக்க வேண்டும்.
எனவே உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக எதுவும் கூறமுடியாது என்ற நீதிபதிகள், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன’: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உச்சநீதிமன்றத்தை வேண்டுமானால் அணுகலாம். பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பபட்டுள்ளன. இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எப்படி ஒத்திவைக்க முடியும். கொரோனா இரண்டாவது அலை உடன் ஒப்பிடும்போது தற்போதைய நிலவரம் மோசமாக இல்லை என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் மாநிலத் தேர்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது, அதனை தேர்தலை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் கொரோனா மூன்றாவது அலை தீவிரமாவதால் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிய மனு மீது இன்று விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.