சென்னை, மார்ச் 6- சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை மணிக்கூண்டு இடையே மெட்ரோ ரயில் நிலைய கட்டு மானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அங்கு சாலை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டத்தில், மாதவரம் சிறுசேரி சிப்காட் இடையே, 45.8 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதையில், முதற்கட்டமாக மாத வரம் தரமணி இணைப்பு சாலை வரை, பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன. சுரங்க நிலையங்கள், பாதை கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு, கட்டுமான ஆரம்பக்கட்ட பணிகள், சுரங்க நிலையங்கள் கட்டுவதற்கு பாதுகாப்பு சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை எதிரில் பூமிக்கடியில் மெட்ரோ நிலையம் சுரங்கத்தில் கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, நிலையம் கட்டும் இடத்தில், தற்காலிக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணிக்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்துள்ளது. சுரங்க மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க பாதுகாப்பு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது இதற்காக, ராயப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து மணிக்கூண்டு நோக்கி செல்லும் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை வெஸ்லி சர்ச் அருகே மணிக்கூண்டில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனை நோக்கி செல்லும் சாலையில் தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளன. இச்சாலையில் வாகனங்கள் இருவழியிலும் மெட்ரோ ரயில் பணிக்கு இடையூறு இல்லாமல் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் கட்டுமான பணிக்காக ராட்சத கிரேன்கள் மற்றும் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.