districts

img

ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் முன்பு குவிக்கப்பட்டுள்ள கட்டிட கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, ஜூன் 18-

      திருக்கோவிலூரை அடுத்துள்ள அரகண்டநல்லுாரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்  முன்பு இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரகண்டநல்லுாரில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்கள் மழையில் சிக்கி வீணாவதை தடுக்க புதிய கட்டிடம் கட்டி அண்மையில் முடிக்கப்பட்டது. முன்னதாக இங்கிருந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட சுவர் மற்றும் செங்கல் காரைகள் புதிய கட்டிடத்தின் முன்பாக கொட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் தானியங்களை புதிய கட்டிடத்தில் வைக்க முடியாமல் வெளியிலேயே வைத்துள்ளனர். மேலும், இதனை கொள்முதல் செய்யும் வியாபாரிகளும் தானியங்களை பாதுகாக்க முடியாமல் அவதியுறுகின்றனர். இந்த கட்டிட காரைகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக இங்கு இருக்கிறது. இதனை அகற்ற விற்பனை கூட அதிகாரிகளோ, திருக்கோவிலூர் நகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, புதிய கட்டிடத்தின் எதிரில் இருக்கும் பழைய கட்டிடத்தின் காரைகளை அகற்றி விவசாயிகளின் நலன் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.