கடலூர், ஜூன் 10-
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதலாவது சுரங்கத்தில் பவர் ஸ்டேஷனில் கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்த செல்வதுரை (37) என்பவர் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் செல்வதுரை பணியில் ஈடுபட்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு அவர் உடல் மீது தீ பரவியது.
உடனடியாக அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு என்எல்சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்வதுரைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வதுரை சனிக்கிழமை (ஜூன் 10) காலை இறந்தார். இதுகுறித்து டவுன்ஷிப் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.