கடலூர், டிச.30- கடலூரில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா திங்களன்று (டிச.30) நடைபெற்றது. அமைச்சர்கள் பங்கேற்றனர். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்க தொடக்க விழா கடலூர் புனித அன்னாள் மகளிர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆகியோர் கலந்து கொண்டு புதுமைப் பெண் திட்டத்தின் வங்கி அட்டையை மாணவிகளுக்கு வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. ஐயப்பன், சபா.ராஜேந்திரன், எம்.ஆர். ராதா கிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.