சிதம்பரம், மே 31- வீடு இழந்தவர்களுக்கு வீட்டு மனை வழங்கப்படும் என்று சிதம்பரம் நகரமன்றத் தலைவர் உறுதியளித்தார். சிதம்பரம் நகராட்சியில் நகர் மன்றக் கூட்டம் தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் அஜிதா பர்வீனா, பொறி யாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், “நீர்நிலை ஆக்கிரமிப்பு சம்பந்தமான பிரச்சனைகளில் அதிகாரிகள் மாற்று இடம் கொடுக்காமல் வீடுகளை அப்புறப் படுத்தக் கூடாது. அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார். இதற்கு விளக்கம் அளித்த நகர் மன்றத் தலைவர்,“ ஆக்கிரமிப்பு என வீடுகளை இழந்தவர்களுக்கு அரசுத் திட்டங்கள் அல்லது சொந்த செலவில் குடிமனை வழங்கப்படும்” என்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் 5ஆவது வார்டு உறுப்பினர் தஸ்லிமா பேசுகை யில், “புளியந்தோப்பு பகுதியில் சாக்கடை தூர் வரமல் உள்ளதால் கொசு உற்பத்தியாகிறது. பாதள சாக்கடை மூடி உடைந்து திறந்து கிடக்கிறது. மின் விளக்குகள் எரியவில்லை, வடக்கு வடுகதெருவில் சிறுவிசை மின் பம்புடன் கூடிய குடிநீர் தொட்டி பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே தீர்வு இந்த பிரச்சனைகளுக்கு விரைந்து காண வேண்டும்” என்றார். இதற்குப் பதில் அளித்த நகர் மன்ற தலைவர்,“ தெருவிளக்கு, சாக்கடை தூர் வாரும் பணிகள், கொசு மருந்து அடிக்கும் பணிகள் தினசரி மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் சிதம்பரத்திற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருவதால் குறைந்த வாடகையில் அவர்கள் தங்கிச் செல்லும் வகையில் தங்கும் விடுதி அல்லது ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் கட்டப்படும்” என்றார். 33ஆவது வார்டு இந்திரா நகர் பகுதியில் ரயில்வே நிர்வாகம் அமைக்கும் தடுப்பு சுவரை 3 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்க வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.