திருவண்ணாமலை, ஜூலை 3- வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்களின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் சி. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன் சிறப்புரையாற்றினார். சிஐடியு முன்னாள் தலைவர் பெ. கண்ணன், தையல் சங்க மாவட்ட செயலாளர் எம். வீரபத்திரன், காட்டுநாயக்கன் சங்க பொதுச் செயலாளர் அய்யனார், மாவட்ட தலைவர் மணிமாறன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் உதயகுமார், பொருளாளர் அருண்குமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சி.அப்பாசாமி, சிபிஎம் வட்டார செயலாளர்கள் ரமேஷ் பாபு, ரவிதாசன், மலைசங்கம் சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், ஆரணி அடுத்த தச்சூர் இருளர் பகுதி மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு, தனிநபர் கழிப்பறை, மயானம், சாதி சான்று உள்ளிட்டவை அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர் கள் உரையாற்றினர். போராட்டம் நடத்திய வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆரணி கோட்டாட்சியர், இரண்டு மாத காலத்திற்குள் தச்சூர் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.