பொதுமுடக்கம்: வெறிச்சோடிய செஞ்சிக் கோட்டை செஞ்சி, ஜன. 16- காணும் பொங்கலையொட்டி கூட்டம் நிறைந்து காணப்படும் உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டை, பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. உலகம் முழுவதும் தை 1ஆம் தேதி தமிழர் திருநாளாம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 3 நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் விழாவின் கடைசி நாளன்று காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத்தலங்களுக்கும், பொழுதுபோக்கு இடங்களுக்கும் செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு பொதுமுடக்கம் காரணமாக காணும் பொங்கல் களையிழந்து காணப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் வந்து காணும் பொங்கல் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முழு பொதுமுடக்கத்தன்று காணும் பொங்கல் வந்ததன் காரணமாக செஞ்சிக் கோட்டை மூடப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.