கடலூர், ஜூன் 13-
வானிலை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டதையடுத்து புதன்கிழமை (ஜூன் 14) முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லலாம் என்று கடலூர் மாவட்ட மீன்வளம் (ம) மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
வங்கக் கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவும் எனவும் மற்றும் கடல் காற்றானது மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் எனவும் வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் ஜூன் 9ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல கூடாதென அறிவுறுத்தப்பட்டது.
தற்போது, வானிலை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளபட்டதால், கடலூர் மாவட்டத்திலுள்ள இயந்திரம் பொருத்திய மற்றும் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் புதன்கிழமை அன்றும், விசைப்படகுகள் (ஐபி மற்றும் எஸ்டிபி) வியாழக்கிழமை முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், உயிர்காப்பு உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை தவறாது உடன் எடுத்துச் சென்று பாதுகாப்பாக மீன்பிடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.