districts

அமிலம் பாதித்த மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் மாணவர் சங்க தலைவர்கள் வலியுறுத்தல்

சிதம்பரம், ஜூன் 18-

     சிதம்பரம் அரசு உதவிப்பெறும் பள்ளியில் அமில பாதிப்பால் பாதிக்கப்பட்ட மாணவரை இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    சிதம்பரம் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வியாழனன்றுபள்ளி ஆய்வகத்தில்  12 ஆம் வகுப்பு மாணவர் அப்துல் ஹமீதுக்கு  காலில் அமிலம் பட்டு எரிச்சல் ஏற்பட்டுள்ளது  அதனை அவரது கைகுட்டையால் துடைத்து நுகர்ந்ததாகக் கூறப்படுகிறது. அதனைக் கழுவி விட்டு  வகுப்பறையில் அமர்ந்து சிலமணிநேரம் வகுப்பைக் கவனித்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு சென்ற அவர் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்த தால் ஆபத்தான நிலையில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்தச்சம்பவம்குறித்து சனிக்கிழமை  கடலூர் மாவட்ட கல்வி அலுவலர் ராம கிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் ஏஎஸ்பி  ரகுபதி, காவல் ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் லட்சுமிராமன் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பள்ளியில் அமிலம் பட்டதால் மாணவருக்கு இது போன்று நிலை ஏற்பட்டுள்ளதா? அல்லது மாணவரின் வீட்டின் அருகே உள்ள கவரிங் நகை செய்யும் நகை பட்டறையிலிருந்து சைனைட் உள்ளிட்ட அமில பொருட்கள் ஏதாவது நுகர்ந்ததால்  ஏற்பட்டுள்ளதா? என்றகோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.பின்னர் இதுகுறித்து ஆய்வு அறிக்கை வந்தபிறகு முழு விவரமும் தெரியவரும் என்று கூறுகின்றனர்.

    இதனையறிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச்செயற்குழு உறுப்பினர் குமரவேல், கடலூர் மாவட்ட செயலாளர் லெனின், தலைவர் சிவானந் ஆகியோர் சிகிச்சை பெற்றுவரும் மாணவரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினர். இதுகுறித்து மாநில செயற்குழு உறுப்பினர் குமரவேல் நீண்ட நாட்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளியில் போதிய பராமரிப்பு பணிகளைப் பள்ளி நிர்வாகம் மேற்கொண்டிருக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கினை இந்திய மாணவர் சங்கம் கடலூர் மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு மாவட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் தாமதமின்றி செய்து தர வேண்டும்.  அதே போல்  சம்மந்தப்பட்டபள்ளி நிர்வாகத்தின் மீது மாவட்ட கல்வி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும்  மாவட்ட கல்வி நிர்வாகமும் அனைத்து பள்ளிகளையும்  திறப்பதற்கு முன் அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வினை மேற்கொள்ள தவறி இருக்கிறது. என்பதை சுட்டிக்காட்டுவதோடு, அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர், மின்சாரம், ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை  வசதிகள்குறித்து ஆய்வுகளை விரைந்து மேற்கொண்டு தேவையான அனைத்து  வசதிகளையும் உறுதிபடுத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கடலூர் மாவட்டக்குழு சார்பில்  வலியுறுத்தப்பட்டுள்ளது.