districts

பூர்வீக அட்டவணை சான்றுக்காக பெண் வாரிசுகளை மீண்டும் மீண்டும் அலைகழிப்பதா?

புதுச்சேரியில் தலித் மக்கள் பூர்வகுடி (ஆரிஜின்) மற்றும் குடியேறிய (மைகிரேஷன்) தலித் என்று பிரித்து வைக்கப்பட்டு ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்படும் அவலம் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்கிறது. இது அரசியல் சாசன மீறல் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக தொடர் இயக்கம் நடத்தப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பல நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.  மேலும், தலித் மக்களுக்கு துணைத் திட்ட நிதி உள்ளூர், வெளியூர் ஆகிய இருதரப்பு தலித் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெறப்படுகிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இரு தரப்பினரிடமும் பேசி சுமுகமாக இப்பிரச்சனையை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.  குறிப்பாக, ஒரே குடும்பத்தில் பிறந்த உள்ளூர் ஆண் வாரிசுகள் பூர்வீக தலித்துகளாக கருதப்பட்டு, சாதி சான்று வழங்கப்படுகிறது. இந்த பிரிவை சார்ந்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, நிதி உதவி மற்றும் நலத்திட்ட பலன்களை பெறும் போது,  பூர்வீக அட்டவணை இனப் பெண் வாரிசுகள் பூர்வீக அட்டவணை இனத்தவர்களாக கருதப்படுவதில்லை. புலம்பெயர்ந்த கருதப்படுகின்றனர். எஸ்சி மைக்ரேஷன் என சான்று வழங்கப்படுகிறது. இதனால் பொதுப் பட்டியலில் வைக்கப்பட்டு அரசியல் சாசன உரிமைகள் மறுக்கப்படுகிறது. எந்த இட ஒதுக்கீட்டு, நலத்திட்ட பலன்களையும் பெற முடியாது. இலவச கல்வி மறுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை நோக்கி துரத்த படுகின்றனர்.அங்கு வரை முறை அற்ற கல்வி கட்டணத்தை கட்ட முடியாமல் அவதியுறுகின்றனர். மேலும் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தலித்துகளுக்கு இலவச கல்வி என்று புதுச்சேரி அரசு ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது. அதுவும் பூர்வீக அட்டவணை மக்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பின்வரும் தீர்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் இருதரப்பு தலித் மக்களையும் நீதிமன்றத்தை நோக்கி துரத்தும் நயவஞ்சக செயலில் ஈடுபடுகிறது புதுச்சேரி அரசு செய்கிறது.  ஜெயா மற்றும் ஒன்றிய அரசு, சிவா கென்னடி ஜான்சன் மற்றும் ஒன்றிய அரசு ; சுமதி மற்றும் ஒன்றிய அரசு, உத்தரப்பிரதேச மாநிலம் அரவிந்த் ஸ்ரீவத்சவா போன்ற தீர்ப்புகள் இடஒதுக்கீடு பலன்களை வழங்கும் போது ஆண், பெண் பாகுபாடு கடைப்பிடிக்கக் கூடாது. இது சட்டவிரோதம் என சுட்டிக்காட்டிய பின்பும் இந்த பாரபட்சம் தொடர்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை ஆட்சியர், பூர்வீக அட்டவணை இன பெண்களுக்கு, பூர்வீக அட்டவணை இன சான்று வழங்க உத்தரவிட்டார். இதற்கு எதிராக சில தலித் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதன் அடிப்படையில் புதுச்சேரி அரசு துணை ஆட்சியரை காரைக்காலுக்கு மாற்றம் செய்தது. மேலும், புதுச்சேரி பூர்வீக அட்டவணை இனத்தவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் துணை ஆட்சியர்  உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை ஆட்சியர் வழங்கிய உத்தரவு  அரசியல் சாசனத்தின் படி சரியாக இருப்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என புதுச்சேரி பூர்வீக அட்டவணை இனத்தவர் உரிமை பாதுகாப்பு இயக்கம் தொடுத்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் மக்களை இரு கூறுகளாக பிரித்து நீதிமன்றங்களுக்கு மீண்டும் மீண்டும் செல்லும்படி அலைக்கழிக்கும் போக்கை புதுவை அரசு கைவிட வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பூர்வீக பெண் வாரிசுகளுக்கு பூர்வீக அட்டவணை இன சான்று தடையில்லாமல் வழங்கவும் வலியுறுத்துகிறோம். மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.