districts

சென்னை முக்கிய செய்திகள்

குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த தந்தை கைது

சென்னை, ஜூலை 18- சென்னை வியாசர்பாடியில் பிறந்து 11 நாட்களில் பெண் குழந்தையை கத்திரிக் கோலால் குத்திக் கொலை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டார். வியாசர்பாடி சுந்தரம் 4ஆவது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். இந்நிலையில் கர்ப்ப மாக இருந்த விஜயலட்சுமிக்கு 3ஆவதாக ஒரு பெண் குழந்தை கடந்த மாதம் 29ஆம் தேதி பிறந்தது. இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி வயிற்றில் பலத்த காயங்களுடன் இருந்த அந்த பெண் குழந்தையை எழும்பூர் குழந்தை கள் நல மருத்துவமனையில் ராஜ்குமாரும், விஜயலட்சுமியும் சேர்த்தனர்

. அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த குழந்தை கடந்த 10ஆம் தேதி இறந்தது. இறந்த குழந்தையின் வயிற்றில் பலத்த காயங்கள் இருந்ததால், மருத்துவர்கள் அந்த குழந்தையை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அந்த குழந்தை வயிற்று பகுதி கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அவர்கள் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜ்குமாரை பிடித்து நடத்திய விசாரணையில், ராஜ்குமார் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததனால் விரக்தியில் இருந்ததாகவும் அதன் விளைவாக சம்பவத்தன்று அந்த குழந்தையை கத்திரிக்கோலால் குத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

அரசு பேருந்து மோதி பெண் பலி

அம்பத்தூர், ஜூலை 18- திருவேற்காட்டில் நடந்துச் சென்ற பெண் மீது  அரசு பேருந்து மோதிய விபத்தில் தனியார் நிறுவன பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

சென்னை திருவேற்காட்டை சேர்ந்த ஜெயா (58) என்பவர் வேலப்பன் சாவடியில் தனியார் டைல்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் வியாழக்கிழமை வேலைக்கு செல்வதற்காக திருவேற்காடு வேலப்பன்சாவடி சாலை யில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது தி.நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி வந்த அரசு பேருந்து வேலப்பன்சாவடி மேம்பாலத்தில் திரும்பிய போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் நடந்து வந்த ஜெயா மீது  மோதியுள்ளது. இதில் பலத்த காய மடைந்த ஜெயா சம்பவ இடத்திலேயே  உயி ரி ழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவல் துறை யினர் ஜெயாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்தம் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுக்கடலில் மீனவர் மயங்கி பலி

சென்னை, ஜூலை 18- திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் பகுதியை சேர்ந்தவர் மீனவர் ராஜேந்திரன் (53). இவரது மனைவி குமுதா (47). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் ராஜேந்திரன் புதன்கிழமை அதிகாலை திருவொற்றியூர் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து தனியாக பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.

இதையடுத்து ராஜேந்திரனின் உறவினர் அரசுமுத்து என்பவர் படகை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்ற போது, சுமார் 3 கி.மீ. தூரத்தில் இருந்த படகில் ராஜேந்திரன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து அந்த படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது ராஜேந்திரன் இறந்திருப்பது தெரியவந்தது.