திருவண்ணாமலை, செப்.27- திருவண்ணாமலையில் விவசாயிகள் நில அளவை பிரச்சனைகளில் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தியும், மனு கொடுத்த விவசாயிகள் ஆண்டு கணக்கில் அலைக்கழிக்கும் வட்டாட்சியரை கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, போராட்டக் குழு வினருடன் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக ஏழு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. அதில் வேங்கிக்கால் கிராமத்தை சேர்ந்த செந்தாமரை கண்ணன் என்பவரின் 15 சென்ட் நிலத்தை அளவீடு செய்து 15 நாட்களுக்குள் பட்டா மாறுதல் செய்து தருவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்தார். மேலும், மற்ற மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். ஒன்றியத் தலைவர் பி. ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி. கே. வெங்கடேசன், செயலாளர் அ. உதய குமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமதாஸ், நகர செயலாளர் எம். பிரகல நாதன், வழக்கறிஞர் எஸ். அபிராமன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம், தலைவர் ஜி .அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.