சென்னை, ஜன.2- பருவமழை காரணமாக சென்னையில் வாக்கிங் நிமோனியா காய்ச்சல் பரவல் மக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த மைக்கோ பிளாஸ்மா நிமோனியாவால் ஏற்படும் நுரையீரல் தொற்று உள்ளவர்கள் வீட்டிலோ அல்லது படுக்கையிலோ இருக்க மாட்டார்கள். நடமாடி கொண்டிருப்பார்கள். எனவே தான் வாக்கிங் நிமோனியா என்று பெயர் வைத்துள்ளனர். பொதுவான அறிகுறிக ளாக உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டை வலி இருக்கும். குழந்தைகளை பொறுத்தவரை தும்மல், சுவாசிப்பதில் சிரமம், சளி, கண்களில் நீர் வடிதல் காணப்படும். நுரையீரல் தொற்று உள்ளவர்களுக்கு பொதுவாக குளிர், அதிகமான இருமல், சோர்வு காணப்படும். சிலர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். இந்த மாதிரி அறிகுறி இருப்பவர்கள் பி.சி.ஆர்., ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நெருக்கமான இடங்களில் செல்பவர்கள், மாணவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் எளிதில் இந்த தொற்றுக்கு ஆளாகிறார்கள். இந்த தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி மட்டுமே தீர்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.