புதுச்சேரி,டிச.27- மக்களின் பொதுசுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவியல் இயக்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. புதுவை அறிவியல் இயக்கத்தின் 18வது மாநாடு அறிவியல் தலைவர் பேரா. அமுதா தலைமையில் நடைபெற்றது. அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேரா.ராஜமாணிக்கம் துவக்கி வைத்தார். சென்னை கனித அறிவியல் நிறு வனத்தின் மருத்துவர் டி.இந்துமதி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் சுப்பிர மணி வாழ்த்திப் பேசினார். இயக்கத்தின் ஸ்தாபகர் மருத்துவர் சுந்தரராமன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக மாநாட்டு செயல் அறிக்கையை பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் வாசித்தார். சுகாதாரத் துறைக்கு நிதி நிலையில் 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து மக்களுக்கும் பொது சுகாதாரத்தை உறுதி செய்திட வேண்டும். செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கூடுதல் ஆஷா பணியாளர்களை நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும். முறை சாரா தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மூலம் மருத்துவ வசதியை உறுதிப்படுத்த வேண்டும். புதுச்சேரியின் நீராதாரங்களை பாதுகாக்க ஏரிகளை சமூக பங்களிப்போடு புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி கடற்கரை மணல் பரப்பை பாதுகாக்கும் வகையில் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் கடற்கரை கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். மூடநம்பிக்கைக்கு எதிரான தீய பழக்கங்களை தடுக்கவும் தண்டிக்கவும் விரைவில் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.