districts

மின்ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்?

சென்னை, ஜன.9 - மின்வாரிய தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்தி இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கடந்தும் இதற்கான பேச்சுவார்த்தையை நிர்வாகம் முறையாக தொடங்காமல் உள்ளது. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளை, அயல்பணி (அவுட்சோர்சிங்) முறையில் செய்யக் கூடாது, வாரிய சுற்றறிக்கை பிபி-2ஐ ரத்து செய்ய வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊழியர்களுக்கு ஒரே மாதிரி பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10 அன்று வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இதனையடுத்து தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் 2 முறை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் திங்களன்று (ஜன.9) தொழிற்சங்கங்களுடன் வாரிய நிதிச் செயலாளர் சுந்தரவதனம் மற்றும் அரசு நிர்ணயித்த ஐஏஎஸ் அதிகாரிகள் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 7.30 மணி வரை உடன்பாடு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, திட்டமிட்டபடி இன்றைய தினம் வேலை நிறுத்தம் நடைபெறலாம் என்று தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.