districts

சாலையோர விற்பனைக்குழு தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் சாலையோர வியாபாரிகள் சங்கம் கோரிக்கை

சென்னை, பிப். 13 - சாலையோர விற்பனைக்குழு (வெண்டிங் கமிட்டி) தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று  தமிழ்நாடு சாலை யோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதியிடம் திங்களன்று (பிப்.13) சாலையோர வியாபாரிகள் சங்க  தென்சென்னை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் வி.தாமஸ், (சிஐடியு), சென்னை மற்றும் புறநகர் முறை சாரா சங்க மாவட்ட பொதுச் செயலாளர் யு.அணில்குமார், பொருளாளர் கே.மோகன்ஜி, மாவட்ட துணை தலைவர் சிங்காரம் உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதில், சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து,  விடுபட்டவர்களுக்கு அடை யாள அட்டை வழங்கிட வேண்டும். சாலை யோர விற்பனைக்குழு தேர்தலை  ஜனநாயக பூர்வமாக நடத்த வேண்டும். இந்தக்குழுவில் 15ல் 6 பேர் வியாபாரிகள் என்பதை மூன்றில் இரண்டு பங்கு என மாற்ற வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டம் - 2014 குறித்து அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இலவச தள்ளு வண்டிகளை சாலையோர வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசித்து முறைகேடு இன்றி வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகளை கந்து  வட்டியில் இருந்து விடுவித்திட, கூட்டுறவு வங்கி மூலம் 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அரசு நிறை வேற்ற வேண்டும். வியாபாரிகளை வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.