படப்பிடிப்பின் போது சண்டை கலைஞர் உயிரிழப்பு
சென்னை, ஜூலை 17- சென்னை சாலிகிராமத்தில் சர்தார் 2 திரைப்பட படப்பிடிப்பின் போது 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சண்டை கலைஞர் உயிரிழந்தார்.
நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்பட படப்பிடிப்பு கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக செவ்வாயன்று ஒரு சண்டை காட்சியை அந்த திரைப்படக் குழுவினர், அங்கு படமாக்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நடித்துக் கொண்டிருந்த சண்டை கலைஞர் புது வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவைச் சேர்ந்த ஏழுமலை (54) திடீரென தவறி விழுந்தார்.
இதைப் பார்த்த படக்குழுவினர், ஏழுமலையை மீட்டு அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதுகுறித்து விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில் போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி திரைப்பட படப்பிடிப்பு நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
மாடியிலிருந்து விழுந்த பெண் தொழிலாளி மரணம்
அம்பத்தூர், ஜூலை 17-
ஆவடி அருகே கட்டுமானப் பணியின் போது 4ஆவது மாடியில் இருந்து விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்தார்.
ஆவடி அருகே பட்டாபிராமில் சிடிஎச் சாலை ஒட்டி கடந்த 4 ஆண்டுகளாக டைடல் பார்க் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், வேடூர் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி வளர்மதி என்பவர், கடந்த சில நாட்களாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று வளர்மதி 4ஆவது மாடியில் பணியாற்றி கொண்டிருந்த போது, திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவல் அறிந்து பட்டாபிராம் காவல் துறையினர் வந்து சடலத்தை மீட்டு, பிரேத சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, பொறியாளர், ஒப்பந்ததாரர் உள்ளிட்டோருடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை மின்சார ரயில்கள் ரத்து
சென்னை,ஜூலை 17- சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 55 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2ஆம் கட்ட பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.
ஒரே நாளில் ரூ.720 உயர்ந்த தங்கம் விலை
சென்னை,ஜூலை 17- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்து 360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.784 அதிகரித்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்து 392க்கு விற்பனை செய்யப்படுகிறது.