சென்னை,ஜூன் 20-
சென்னை கோயம்பேடு சந்தைக்கு செவ்வாயன்று 450 லாரிகளில் காய்கறிகள் வந்தன.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி விற்பனை எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
அதிகாலையில் மழை பெய்ததால் சந்தைக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கோயம்பேடு சந்தை வளாகம் காலை வெறிச்சோடியது. தக்காளி, கத்தரிக்காய், முட்டைக்கோஸ், சுரைக்காய், காலிபிளவர், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை, மூட்டையாக தேங்கியது.
இதனால் மொத்த வியாபாரிகள் கவலை அடைந்தனர். கடந்த சில நாட்களாக மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.100-க்கு விற்ற பீன்ஸ் செவ்வாயன்று ரூ.80-க்கு விற்கப்பட்டது. அதேபோல் கிலோ ரூ 80-க்கு விற்ற அவரைக்காய் ரூ.50-க்கும், ரூ70-க்கு விற்ற உஜாலா கத்தரிக்காய் ரூ.45-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வரும் இஞ்சி ஒரு கிலோ ரூ.175-க்கு விற்பனையானது.