சென்னை சென்ட்ரலில் டிஜிட்டல் லாக்கர் வசதி
சென்னை, பிப்.16- சென்னை சென்ட்ரலில் பயணிகளின் உடைமைகளை பாதுகாக்க புதிதாக டிஜிட்டல் லாக்கர் அறை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டிஜிட்டல் லாக்கர் அமைப்பு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகிறது. லாக்கர்களை போன்செல் என்ற நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகளின் உடைமைகளின் அளவைப் பொறுத்து சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான சுமார் 80 லாக்கர்களை அமைத்துள்ளது. இது ரயில் நிலையத்தில் உள்ள லாக்கர் அறைக்கு ஒரு டிஜிட்டல் மாற்றாகும். முன்பெல்லாம் பயணிகள் தங்களது உடைமைகளை வைக்க பூட்டு சாவியை பயன்படுத்துவர். ஆனால் தற்போது இவை டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு இது பாதுகாப்பை உறுதி செய்யும். பயன்படுத்துவது எப்படி? க்யூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்தால், லாக்கர் செயலி திறக்கும். பின்னர் லாக்கர் அளவை தேர்வு செய்து, நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். இதையடுத்து, தொகை காண்பிக்கப்படும். ஜி.பே மூலம் பணம் செலுத்தலாம். பின்னர், லாக்கர் எண்ணுடன் தனிப்பட்ட ஒடிபி பயணியின் செல்போனுக்கு அனுப்பப்படும். உடைமைகளை திறந்து எடுக்க ஒடிபி குறியீட்டை பயன்படுத்த வேண்டும். லாக்கரை பூட்ட மீண்டும் குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
ராணிப்பேட்டை, பிப். 16 – ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பானாவரம் கூட்ரோடு பகுதியில் தனியார் மண்டபத்தில் ஒரு திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு அமைச்சர் ஆர். காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை வரவேற்பதற்காக வழி எங்கிலும் கொடிக்கம்பம் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிறன்று (பிப். 16) காலை திருமண விழா நிறைவடைந்ததை அடுத்து திமுக கொடி கம்பங்களை நெமிலி தாலுகா, சைனாபுரம் கிராமத்தை சேர்ந்த குமார் (48) என்ற கூலிதொழிலாளி அகற்றும் போது எதிர்பாராத விதமாக கம்பம் அருகில் உள்ள மின் உயர் மீது சாய்ந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சோளிங்கர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மணலியில் தனியார் தொழிற்சாலையில் விபத்தில் ஒருவர் பலி
சென்னை, பிப். 16- மணலி பயோ கேஸ் தொழிற்சாலை யில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியானார். மணலி பல்ஜிபாளையம் அருகில் மாந கராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கு தனியார் நிறுவனம் ஒன்று மக்கும் குப்பைகள் மூலம் பயோ கேஸ் தயாரித்து வருகிறது. இங்கு பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பணி செய்து வருகின்றனர். தொழிற்சாலையின் கண்காணிப்பு அறையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணகுமார் (25), பொன்னேரியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாஸ்கர் என்பவரும் இருந்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கன அழுத்தம் காரணமாக இயந்திரம் வெடித்ததில் அந்த அறை தரை மட்டமானது. பெருத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அங்கு கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர் பாஸ்கரை படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணகுமார் மீது கட்டிடக் கழிவுகள் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து மணலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கேஸ் வெடித்து சிதறியதால் அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக்கூறி, தொழிற்சாலை முன்பு பொது மக்கள் கூடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ சங்க மதுரவாயல் வடக்கு பகுதி மாநாடு
சென்னை, பிப்.16 - ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் மதுரவாயல் வடக்கு பகுதி 24வது மாநாடு சனிக்கிழமையன்று (பிப்.15) போரூரில் நடைபெற்றது. பகுதி தலைவர் ஜி. ராம்போஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பகுதிச் செயலாளர் க.சுப்ரமணி வேலை அறிக்கையையும், பொருளாளர் சி. பெருமாள் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.முகமது அனிபா, பொதுச் செயலாளர் இ.உமாபதி, பொருளாளர் ஏ.பக்கிரி, துணைத் தலைவர் சி. முருகன், சிபிஎம் மதுரவாயல் பகுதிச் செயலாளர் டி.அரவிந்தன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சரவண செல்வி உள்ளிட்டோர் பேசினர். பகுதி தலைவராக ஜி. ராம்போஸ், செயலாளராக க.சுப்ரமணி, பொருளாளராக சி. பெருமாள் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ரூ.2.5லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருடிய பெண் கைது!
காஞ்சிபுரம், பிப்.16 - காஞ்சிபுரம் நகைக் கடையில் ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடியதாக பெண் ஒருவரை சிவகாஞ்சி காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரத்தில் காந்தி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை காணவில்லையென அக்கடையின் நிர்வாகி சீனிவாசன், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடையிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அதில் ஒரு பெண் நகை வாங்குவது போல திருடுவது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது அவா் சின்னக் காஞ்சிபுரம் பல்லவா் மேடு ரவி மனைவி ரமாதேவி(48) என்பது தெரிய வந்து அவரைக் கைது செய்தனா். அவா் திருடியதாக 21,774 கிராம் எடையும் ரூ.2.5லட்சம் மதிப்பும் உடைய வைர வளையல்,மோதிரம் மற்றும் காதணி ஆகியவற்றை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
வரிவசூல் என்ற பெயரில் கடலூர் மாநகராட்சி அடாவடி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
கடலூர், பிப்.16- கடலூர் மாநகராட்சி பகுதிகளில் வரி வசூல் என்ற பெயரில் மாநகராட்சி ஊழி யர்கள் அடாவடியில் ஈடுபடுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரி வித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வீட்டு வரி, தண்ணீர் வரி, பாதாள சாக்கடை வரி, குப்பை வரி, வாடகை கடைக்கான வரி, சொத்து வரி என பல்வேறு பெயர்களில் வசூ லிக்கப்படும் வரிகளின் அளவை பல மடங்கு மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளது. ஏழை-எளிய மக்கள் போதுமான வருமானம் இல்லாத சூழ்நிலையில், வியா பாரம் நடத்தக்கூடிய வியாபாரிகள் போது மான வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். பிப்ரவரி 21, 22 ஆகிய தேதிகளில் தமிழக முதலமைச்சர் கடலூர் மாவட்ட த்திற்கு வரும் நேரத்தில், வரி வசூல் பாக்கி என்ற பெயரால் கடைகளுக்கு சீல் வைப்பது. கடைகளுக்கு முன்பாக குப்பை கொட்டுவது. வீட்டு உரிமையாள ரிடம் மாநகராட்சி ஊழியர்கள் வாய்க்கு வந்தபடி திட்டுவது. மஞ்சகுப்பம் செந்தாமரை நகரில் வீட்டின் படிக்கட்டு கள் இடித்து அடாவடித்தனம் செய்தி ருப்பது கண்டிக்கத்தக்கதாகும். எனவே வீடுகளுக்கும், கடைகளுக்கும் விதிக்கப்பட்ட அதிகப்படியான வரியை குறைப்பதற்கு மாநகராட்சி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
புழுதியால் அவதிப்படும் ஓசூர் மாநகரவாசிகள்
கிருஷ்ணகிரி, பிப்.16 - ஓசூருக்கு 30 கிலோமீட்டர் அருகில் பிரமாண்ட தொழிற்சாலைகள் நிறைந்த மாலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையும் பெங்களூரு செல்லும் சாலையை போலவே மிகவும் முக்கியமானதாகும். இச்சாலையில் இரவிலும் வாகனங்கள் அணிவகுத்து செல்கின்றன. இச்சாலையில் ஓசூர் முதல் சமத்துவபுரம் வரை சுமார் 3 கி.மீ தொலைவிற்கு மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமான சாலையாக உள்ளது. வாகனங்கள் செல்லும் போது வெயில் காலத்தில் புழுதியும் மழைக்காலத்தில் சேரும் சகதியுமாகவே இருக்கும். இதனால், இருசக்கர,நான்கு சக்கர,கனரக வாகன ஓட்டிகள்,நடந்து செல்வோர் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். சாலையின் இரு புறமும் உள்ள உணவகங்கள்,அலுவலகங்கள், வணிக வளாகங்கள்,கடைகளில் தூசி படிந்து மாசு ஏற்படுத்தி வருகிறது.ஓசூர் மேம்பால முதல் சமத்துவபுரம் வரை உள்ள 3 கிலோ மீட்டர் தூர குண்டு குழியுமான சாலையை சீர்படுத்த வலியுறுத்தி நெடுஞ்சாலை துறையிடம் பலமுறை புகார் அளித்தும் சாலை சீர்படுத்தப்படவே இல்லை. எனவே இச்சாலையை உடனடியாக சீர்படுத்திடவேண்டும்,இல்லை என்றால் பல்லாங்குழி ஓசூர் பாகலூர் சாலையில் சிபிஎம் மாநகர குழு சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெறி நாய் கடித்து ஆறு பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
ராணிப்பேட்டை, பிப். 16 – வெறி நாய் கடித்து ஆறு பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அச்சுறுத்தி வரும் வெறிநாயை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சியில் பெரும்பாலான பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றி திரிகிறது. இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனபால் (60), தமிழ்ச்செல்வி (23) , பாரதி (40) ஆகிய 3 பேரை வெறிநாய் ஒன்று திடீர் என கடித்துக் குதறியுள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த வெறி நாய் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சுலோச்சனா என்ற மூதாட்டி, பாட்டி குளம் பகுதியில் தண்ணீர் கேன் போடச் சென்ற நரசிம்மன், தனியார் தொழிற்சாலைக்கு சென்று கொண்டிருந்த குமார் ஆகியோரையும் அந்த வெறி நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அனைவரும் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அரை மணி நேரத்தில் ஆறு பேரை கடித்த வெறிநாயால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் வெறி நாயை நகராட்சி நிர்வாகம் உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக அலுவலர் கோரிக்கை வைத்துள்ளனர்.
கல்பாக்கத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
செங்கல்பட்டு, பிப்.16- கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தலா 220 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல் அலகில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 7 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை. 2-வது அலகில் மட்டும் மின்உற்பத்தி நடந்து வந்தது. இந்த நிலையில் 2-வது அலகில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இத னால் அந்த அலகில் 220 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 1-ந்தேதி 2-வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும்” என்றனர்.
பெண் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் முதியவர் கைது
திருவண்ணாமலை, பிப்.16- திருப்பதியைச் சேர்ந்த தம்பதி மனநிலை குன்றிய தன் 10 வயது மகளுடன் வெள்ளிக்கிழமை திருவண்ணா மலைக்கு வந்து வழிபாடு செய்து, கிரிவலம் மேற்கொண்டனர். திருப்பதிக்கு செல்ல சனிக்கிழமை காலை ரயிலில் செல்ல, அதிகாலை 4 மணி அளவில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குழந்தையுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகளின் பெற்றோர் அயர்ந்து தூங்கிய நிலையில் அங்கே வந்த அரக்கோணம் பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 60) என்பவர் மனநலம் குன்றிய குழந்தையிடம் பொம்மை வாங்கி தருவதாக கூறி தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். குழந்தை காணவில்லை என பெற்றோர்கள் தேடிய போது, குழந்தையை முனுசாமி அழைத்து வந்துள்ளார். குழந்தை மீது பல இடங்களில் காயங்கள் காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த பெற்றோர், அந்த முதியவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட போது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி யான நிலையில் முனுசாமியை கைது செய்து கிழக்கு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
லிப்டில் சிக்கிய கடலூர் எம்.பி: கதவை உடைத்து மீட்பு
கடலூர், பிப்.16- கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த இந்திரா நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இரண்டாவது தளத்தில் காங்கிரஸ் கமிட்டியின் கட்சி நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்க கடலூர் எம்.பி விஷ்ணு பிரசாத் சென்றார். 6 பேர் செல்லக்கூடிய அந்த லிப்டில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதுவரை 3 பேர் மட்டுமே சென்று வந்துள்ளனர். இதனை அறியாமல் எம்.பி உட்பட 6 பேர் லிப்டில் சென்றதால் திடீரென பழு தடைந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தங்கும் விடுதி ஊழியர்கள் லிப்டை இயக்கம் முயற்சித்தும் முடியாததால் குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி உள்ளிட்ட இடங்களைச் சார்ந்த தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லிப்டை உடைத்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லிப்ட்டில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் லிப்டில் இருந்த 6 பேரில் இருவர் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக மருத்துவ மனை அழைத்துச்சென்று முத லுதவி அளிக்கப்பட்டது.