வேலூர், பிப்.3- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க வேலூர் மாவட்ட 11 வது மாநாடு வேலூர் ஏலகிரி அரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பா.வேலு தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர்கள் ரா.ஆனந்தன் அஞ்சலி தீர்மானம் வாசிக்க, சு.சுரேஷ் கண்ணன் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் மாநில தணிக்கையாளர் கு.சரவணன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் பா.செல்வகுமார் வேலை அறிக்கையையும், பொருளாளர் செ.அசோக்குமார் நிதிநிலை அறிக்கை யையும் முன்வைத்தனர். மாவட்ட நிர்வாகி கள் எம்.பெருமாள், கா.சத்தியமூர்த்தி, காளிதாஸ், மீனா ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் என்.செந்தில்குமரன், தமிழ்நாடு கல்வித்துறை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் அ.சேகர், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலாளர் ச.பாரி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். மாவட்ட தலைவராக பா.வேலு , செய லாளராக பா.செல்வகுமார், பொரு ளாளராக செ.அசோக்குமார், மகளிர் குழு அமைப்பாளர், மாவட்ட தணிக்கையாளர் உள்ளிட்ட 20 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனைத்து அலுவலகங்களுக்கும் சமமான அளவில் பணியமர்த்த வேண்டும், கலந்தாய்வு முறையில் அனைத்து தரப்பு ஊழியர்களுக்கும் பணி இடமாற்றம் வழங்க வேண்டும், ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை மட்டும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும், அவுட்சோர்சிங் முறையில் ஒப்பந்த பணிக்கு எடுப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்துடன் நிரந்தர பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து துவங்கிய பேரணியை ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பா.ரவி துவக்கி வைத்தார்.