districts

பாலாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மீண்டும் சேதம்

ஆம்பூர், மே 26- ஆம்பூர் அருகே மாதனூர் - குடியாத்தம் தரைப் பாலம் மீண்டும் பாலாற்று வெள்ளத்தில் சேத மடைந்தது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் உள்ளி வழியாக பாலாற்றில் குடியாத்தம் செல்வதற்காக கடந்தாண்டு தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் கடந்த 19ஆம் தேதி  பெய்த மழை காரணமாக பாலாற்று வெள்ளத்தில்  அடித்து செல்லப்பட்டது. மேலும் வேலூர் மாநகரம் ராணிப்பேட்டை நகராட்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் காவிரி கூட்டுக்குடிநீர் பைப்புகள் சேதமானது. இதையடுத்து திருப்பத்தூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித் துறையினர் அரசு அதிகாரிகள் பாலாற்றை பார்வையிட்டு மழை வெள்ளத்தால் பாலாற்றில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3 நாட்களாக இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் செல்ல ஒரு சிறிய நடைபாதை அமைக்கப்பட்டது. அதுவும்  வியாழக்கிழமை (மே 26) காலை பாலாற்று வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால் குடியாத்தம்  மாதனூர் ஒடுகத்தூர் ஆகிய பகுதி மக்கள் வேலூர் திருப்பத்தூர் ஆகிய பகுதிக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவாக மாதனூர்  பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும்  என்று 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.