கடலூர்,ஆக.6- கடலூர் கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பாக நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடலூர்- புதுவை- சென்னை இருப்பு பாதைத் திட்டத்தை நிறை வேற்ற கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆக 7அன்று திருப்பாதிரிப்புலியூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டம் குறித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்த கோட்டாட்சியர் (பொறுப்பு) ரவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் ஆகாஷ், கடலூர் வட்டாட்சியர் பலரா மன், கடலூர் டிஎஸ்பி பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிபிஎம் சார்பில் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பராயன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கீரான், குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், விசிக கடலூர் மக்களவைத்தொகுதி செயலாளர் துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் செந்தில் நகர செயலாளர், சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் குளோப், நகர செயலாளர் நாகராஜன், திக மாவட்ட தலைவர் சிவக்குமார், காங்கிரஸ் ராமராஜ், கார்த்தி, மதிமுக நிர்வாகி கண்ணன், கடலூர் பொதுநல அமைப்பின் செயலாளர் ரவி, தமிழ்நாடு மீனவர் பேரவை சுப்புராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ரயில்வே நிலையத்தை பெயர் மாற்றம் செய்ய வருவாய் துறை விரைந்து நடவடிக்கை எடுப்பது முடிவு செய்யப்பட்டது. ரயில்வே உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பேச்சு வார்த்தை ஆகஸ்ட் 27 அன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் புதன்கிழமை (ஆக7) நடைபெற இருந்த ரயில் மறியல் ஒத்தி வைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் என்ன ?
கோரிக்கைகள் என்ன ?
திருப்பாதிரிப்புலியூர் ரயில்வே நிலையத்தை கடலூர் திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய கடலூர் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் ரயில்வே துறை விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும், திருப்பாதிரிப்புலியூரில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன்பதிவு வசதி செய்திட வேண்டும்.
திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி, மஹால், உழவன், காரைக்கால் ஆகிய விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்,
சேலம் - விருதாச்சலம் ரயில் கடலூர் துறைமுகம் வரை வருவதை திருப்பாப்புலியூர்
வரை நீட்டிக்க வேண்டும்.
விழுப்புரம் - தாம்பரம் ரயில் கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும், மயிலாடுதுறையிலிருந்து கோவை செல்லும் ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும்.
விழுப்புரம் - கடலூர் மயிலாடுதுறை - திருச்சி இரண்டாவது ரயில் பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பணியை துவங்கிட வேண்டும்.