சின்னசேலம், டிச.2 - சின்னசேலம் ரயில் நிலையத்தி லிருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சின்னசேலம் ரயில் நிலை யம் முன்பு மாநில செயற்குழு உறுப்பி னர் கே.பாலபாரதி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடை பெற்றது. புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் ரயில் நிலையத்திலிருந்து மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சி வரை புதியதாக ரயில் பாதை அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 116 கோடி ரூபாய் ஒதுக்கி பணிகளை துவக்கினர். திட்டமிடப்பட்ட பாதையின் இடை யில் 1 மேம்பாலம், 2 பெரிய பாலங்கள், 10 க்கும் மேற்பட்ட சிறிய பாலங்கள் என பல்வேறு பணி களுக்கும் நிதிஒதுக்கீடு செய்தனர். ஆனாலும் பணி மிகவும மந்தமாகவே நடந்து வருகிறது. இதனால், ரயில் வசதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து, ரயில் பாதை பணிகளை ஒன்றிய அரசு விரைந்து முடிக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, சங்கரா புரம், ரிஷிவந்தியம் ஆகிய இடைக் குழுக்கள் சார்பில் வெள்ளிக்கிழ மையன்று(டிச.2) முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் மாநில செயற்குழு உறுப்பினருமான கே. பாலபாரதி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
முன்னதாக சின்னசேலம் வட்டச் செயலாளர் டி.மாரிமுத்து தலை மையில் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை ரயில் நிலையம் முன்பு குவித்து வைக்கப்பட்டிருந்த காவலர்கள் வலுக்கட்டாயமாக தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர், பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் போராட்டத்தின் எழுச்சியை தடுக்க முடியாத நிலையில் ரயில்வேதுறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை யினர் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தற்போது ஒதுக்கப்பட்ட நிதி 116 கோடிக்குள் பாதைப்பணிகளை முடிப்பதில் பிரச்சனை உள்ளது எனவும், மேலும் நிதியை பெற்று 2024 ஏப்ரலுக்குள் ரயில் பாதை பணிகளை முடிப்பதாகவும் துறை அதிகாரிகள் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் முடிவுக்கு வந்தது. கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஏழு மலை, எம்.கே.பூவராகன், எம்.செந்தில், எம்.கே.பழனி, இடைக்குழுச் செயலாளர்கள் வை.பழனி, எஸ்.சிவாஜி, ஜி.அருள்தாஸ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.