districts

சென்னை விரைவு செய்திகள்

நோட்டு புத்தகத்துடன் லாரி கவிழ்ந்தது

திருவள்ளூர்,மே 18- திருவள்ளூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி நோட்டு புத்தகங்களுடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 23 டன் எடை கொண்ட நோட்டு புத்தகங்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி லாரி வந்தது. திருவள்ளூர் அருகே உள்ள மேலனூர் மூலக்கரை பகுதியில் புதனன்று காலை லாரியை டிரைவர் சாலை ஓரமாக நிறுத்த முயன்றார். அப்போது சாலை யோரத்தில் இருந்த மண்ணில் சரிவு ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி 23 டன் நோட்டுப்புத்தகங்களுடன் சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக லார் ஓட்டுநர்  உயிர் தப்பினார்.


மாமல்லபுரத்திற்கு சுற்றுலா  

மாமல்லபுரம்,மே18- கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த  80 பேருக்கும் தொல்லியல் துறை நிர்வாகம் இலவச அனுமதி வழங்கியது. சென்னை கீழ்ப்பாக்கத் தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் இருந்து 80 பேர்  சென்னை சரக்கு போக்குவரத்து நண்பர்கள் குழு சார்பில் சென்னை மாநகர பேரூந்து மூலம் மாமல்லபுரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன் வந்த டாக்டர்கள், ஊழியர்கள், சென்னை சரக்கு போக்கு வரத்து நண்பர்கள் குழு வினர் அங்குள்ள ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி காட்டினர்.


வாலிபர் வெட்டிக்கொலை

அம்பத்தூர்,மே 18- வில்லிவாக்கம், அன்னை சத்யா நகரை சேர்ந்த அய்யப்பன்(வயது35) என்பவர் செவ்வாயன்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. இந்த நிலையில் புதனன்று அதிகாலை பாடி மேம்பாலத்தின் கீழ் அய்யப்பன் தலை யில் வெட்டுப்பட்டு பிணமாக கிடந்தார்.  இந்த மர்ம கொலை குறித்து கொரட்டூர் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


காலமானார்
காஞ்சிபுரம், மே 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் டி.லிங்கநாதன் துணைவியாரும் தீக்கதிர் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி யாளர் கார்த்திக் லிங்கநாதன் தாயாருமான கஸ்தூரி செவ்வாயன்று (மே 18) காலமானார். அவருக்கு வயது 59. உடல்நலக்குறைவால் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்த அவரது உடல் குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.வேல்முருகன், இ.முத்துக்குமார், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இ.சங்கர், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத், தீக்கதிர் சென்னைப்பதிப்பு முன்னாள் பொதுமேலாளர் சி.கல்யாணசுந்தரம், பொறுப்பாசிரியர் அ.விஜயகுமார், தலைமை செய்தியாளர் ஸ்ரீராமுலு, விவசாயிகள் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, கே.வாசுதேவன், எம்.எஸ்.ராஜா, சுகுமாறன், எம்.மோகனன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் ஆறுதல்
சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம், விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கே.சி.பெருமாள், நிர்வாகி எஸ்.துளசி நாராயணன், கோவில் நிலங்களில் குடியிருப்போர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி நடராஜன் ஆகியோர் தொலைபேசியில் லிங்கநாதனை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தனர். கஸ்தூரியம்மாவின் உடன் புதனன்று (மே 18) சிக்கராயபுரத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.


சுவரொட்டி : 161 வழக்குப்பதிவு

சென்னை,மே 18- சென்னை மாநகரில் சாலைகள், தெருக்களில் உள்ள பெயர் பலகைகள், தெருக்கள் பெயர், வார்டு எண், பகுதி எண், மண்டல எண் அஞ்சல் குறியீடு, டிஜிட்டல் முறையில் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் இந்த பெயர் பலகைகளில் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொது இடங்களில் சுவரொட்டிகள், இதர விளம்பரங்கள்  செய்ததாக 161 வழக்கு பதிவு செய்யப்பட்டு  ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 


புகைப்படக் கண்காட்சி

சென்னை, மே 18- சர்வதேச அருங்காட்சி யகங்கள் தினத்தை முன்னிட்டு இந்தியத் தொல்லியல் துறையின் சென்னை வட்டம் சார்பில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில், “தமிழக தொல்லியல் சின்னங்கள்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி துவங்கியது. தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குநர் எஸ்.ஏ.ராமன் புதனன்று (மே 18) இதை திறந்து வைத்தார்.  தமிழகத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் பற்றியும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.