சென்னை,மார்ச் 30- சென்னை சென்ட்ரல் சதுக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாக அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடை பாதை ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று (மார்ச் 30) திறந்து வைத்தார். சென்னையின் அடையாளம் என்று கூறப்படும் இந்த மத்திய சதுக்கம் ரூ.400 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கட்டப் பட்டு வருகிறது. சென்ட்ரல் ஸ்கொயர் என்று சொல்லக் கூடிய பிரமாண்ட கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், அதில் ஒரு பகுதியாக 34.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சதுக்க பூங்கா என்றழைக்கப்பட உள்ளது. சென்னையின் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே ஒரு பிரமாண்டமான திட்ட மாக இது அமைத்துள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ரிப்பன் மாளிகை உள்ளிட்டவை அருகே அமைந்துள்ள இந்த மத்திய சதுக்க பூங்காவானது மிக பிரமாண்டமாக உள்ளது நாள்தோறும் பல லட்சம் மக்கள் இந்த இடத்தை கடந்து செல்வதன் காரணமாக கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை தவிர்க்க பல்வேறு கட்டமைப்புகள் உடன் கூடிய சென்னை அடையாளத்தை உலக தரத்தில் உயர்த்த சென்னை சென்ட்ரல் சதுக்கம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ. நிதி உதவியுடன் 400 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிட்டு தற்போது ரூ 34.22 கோடி மதிப்பீட்டில் சதுக்க பூங்கா மற்றும் சுரங்க நடைபாதையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அவருடன் அமைச்சர் மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதற்கு முன்பு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் ரூ.14.50 கோடி செலவில் பேருந்து நிறுத்தங்கள், உணவகங்கள், சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளிட்டவர்களுடன், பயனாளர்களுக்கு வேண்டிய சிறிய கடைகள் உள்ளிட்டவை கட்டமைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.