சிதம்பரம், நவ. 20- சிதம்பரம், புவனகிரி, பரங்கிப்பேட்டை, கொள்ளிடம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் உள்ளன. இந்த ஆட்டோக்களுக்கு இயற்கை எரிவாயு நிரப்புவதற்காகசிதம்பரம் புறவழி சாலை அம்மன் கோவில் என்ற இடத்தில் எரிவாயு பங்க் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் எரிவாயு நிரப்பி செல்கின்றன. கடந்த 4 நாட்களாக இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டால் ஆட்டோக்கள் இயக்க முடியாத நிலையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் குறைந்த அளவே எரிவாயு எடுத்துவரப்பட்டு ஆட்டோக்களுக்கு நிரப்பபட்டது. தொடர்ந்து கடந்த 4 நாட்கள் ஆட்டோக்களுக்கு எரிபொருள் இல்லாததால் 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கேஸ் நிரப்பப்படும் நிலையம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் அனைத்து ஆட்டோக்களும் நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட அனைத்து இடங்களில் இயங்கும்ஆட்டோக்களுக்கு எரிவாயு நிரப்பும் இடம் இது ஒன்றுதான். இங்கு அடிக்கடி எரிவாயு கிடைக்காததால் ஆட்டோக்களை பெட்ரோல் போட்டு இயக்குகிறோம். இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் ஆட்டோக்களில் பெட்ரோல் மூலம் இயக்குவதால் ஒரு லிட்டருக்கு 10 கிலோமீட்டர் மட்டுமே இயக்கப்படும். இதனால் வண்டிக்கு தவணைக்கடன் கட்டமுடியாமல் பெருத்த நஷ்டம் அடைகிறோம். இந்த பங்கில் அடிக்கடி இது போன்று செயற்கையான முறையில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் பயோ கேஸ் வழங்குகிறார்கள். அதன் விலை 42 ரூபாய் தான். ஆனால் இவர்கள் இயற்கை எரிவாயுக்கு ரூ 75 வசூலிக்கிறார்கள். பயோ கேசால் ஆட்டோக்களை இயங்கினால் ஆட்டோக்களின் என்ஜின்கள் பாதிப்பு ஏற்படுகிறது. அதுவும் போதியஅளவு கிடைக்கவில்லை. ஆனால் பேருந்து மற்றும் கனரக வாகனங்களுக்கு கமிசன் பெற்றுக்கொண்டு கேஸ்வழங்குகின்றனர். அன்றாடம் காய்ச்சியான எங்களுக்கு கேஸ் இல்லை என மனிதாபிமானம் இன்றி கூறுகின்றனர். இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் இல்லையெனில் சாலையில் இறங்கி போராடுவதைத்தவிர எங்களுக்கு வேறுவழியில்லை என்றனர்.