districts

மின்சாரம் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் பலி

சென்னை, ஏப். 12- சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் தினேஷ் (37). இவர் தனியார் நிறுவனத்தில் சுமை ஆட்டோ வாகன ஓட்டுனராக  பணியாற்றி வந்தார். தான் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் கடைகளில் வைக்க தினேஷ்,  விளம்பர பலகைகளை ஏற்றி சென்றார்.  மதுரவாயல், ஆண்டாள் அழகர் நகர் பிரதான சாலையில் உள்ள ஒரு கடையில் விளம்பர பலகை வைக்கச் சென்றார்.  அங்கு ஜெயச்சந்திரன் என்பவருடன் தினேஷ், விளம்பர பலகையை கடையின் முதல் மாடியில் மாட்டுவதற்காக தூக்கிச் சென்றார்.  அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர் மின்  அழுத்த கம்பியில் விளம்பர பலகை உரசியது. இதில், மின்சாரம் தாக்கி தினேசும்,ஜெயச்சந்திரனும் முதல் தளத்தில்  இருந்து கீழே தூக்கி வீசப்பட்டனர்.  சம்பவ இடத்திலேயே தினேஷ், உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன்  சென்ற ஜெயச்சந்திரன் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல் துறையினர் தினேஷ் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலத்தக் காய மடைந்த ஜெயசந்திரனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;