கடலூர்,பிப்.28- பண்ருட்டி அதிமுக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதியில் 2016-2021 ஆண்டில் சட்ட மன்ற உறுப்பினராக சத்யா பன்னீர் செம் இருந்து வந்தார். இந்நிலையில் பண்ருட்டியில் உள்ள அவரது வீடு மற்றும் சென்னையில் உள்ள அவருக்கு சொந்தமான இடம், முன்னாள் நகராட்சி ஆணையாளர் இல்லம் உள்ளிட்ட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 2011 -16ஆம் ஆண்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம், நகர்மன்ற தலைவராக இருந்த பொழுது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பணமோசடி ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பன்னீர்செல்வம் மற்றும் அப்போதைய நகராட்சி ஆணையாளர் பெருமாள் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதன் கிழமை காலை சோதனை செய்தனர். தகவல்அறிந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்மொழிதேவன், கே. ஏ.பாண்டியன், முன்னாள் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் சத்யா பன்னீர்செல்வம் இல்லத்திற்கு வருகை தந்தனர். அப்பொழுது அங்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.