கள்ளக்குறிச்சி, ஆக.7- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆக.7 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சின்ன சேலம் ஒன்றியத்தில் கனியாமூர் ஊராட்சி அய்யனார் கோவில் குளத்தில் அரசு பண்ணைக்குட்டை அமைக்கும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல், கனியாமூரில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டு பணி துவங்க உள்ளத்தையும் பார்வையிட்டோம். இந்த ஆய்வில், நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும். பொதுமக்களுக்கு தடையின்றி பணிகளை தொடர்ந்து வழங்க வேண்டும். கட்டுமானப் பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறினார்.