districts

img

ஏரி நீரில் மூழ்கிய கிணறு: சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

செங்கல்பட்டு, டிச.12- செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமையூர் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகர், வ.உ.சி நகருக்குட்பட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்களுக்கு வ.உ.சி நகர் ஏரியில் கிணறு அமைத்து குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது பெய்த  கன மழையால் வஉசி நகர் ஏரி முழுவதுமாக நிரம்பியுள்ளது.  இதனால் குடிதண்ணீர் கிணறும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. மேலும் குறிப்பிட்டுள்ள இந்த குடிதண்ணீர்  கிணறு அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலை வில் அப்பகுதியின் சுடுகாடு அமைந்துள்ளது. இந்த சுடுகாட்டில் பிணங்கள்  புதைக்கப்பட்ட பகுதியும் தற்போது  ஏரி நீரில் முழுவதும் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இந்த கிணற்றிலிருந்து தண்ணீர் கே.கே. நகர் மற்றும் வ.உ.சி. நகர் பகுதிக்கு வழங்கப் பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்க ளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்ட போது,  ஆண்டுதோறும் மழை பெய்து ஏரி நிரம்பினால் இதே நிலை ஏற்படுகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த கிணற்றில் இருந்தே எங்கள் பகுதிக்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு  நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஆகவே இந்த தண்ணீரை குடிக்காமல் பணம் கொடுத்து குடிதண்ணீர் வாங்கும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.