சிதம்பரம், டிச.28- சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும், மயிலாடுதுறை-கோவை ரயிலை சிதம்பரம் நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி டிச.30 அன்று ரயில் பயணிகள் நலச்சங்கம், அனைத்து கட்சிகள் மற்றும் சமூக நலச் சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சனிக்கிழையன்று (டிச.28) உதவி ஆட்சியர் ரஷ்மிராணி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் திருச்சி ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் மோகனபிரியா முன்னிலை வகித்தார். கோயம்புத்தூர்-மயிலாடுதுறை ஜனசதாப்தி ரயிலை நீட்டிப்பு செய்ய சென்னை அலுவலகத்தில் உயர் அதிகாரியை சந்தித்து அனுமதி வாங்கி தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள் விரைவில் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் சிதம்பரம் வழியாக திருச்சிக்கு ரயிலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றி தருவதாக திருச்சி கோட்ட வர்த்தக மேலாளர் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் டிச. 30 ஆம் தேதி நடைபெற இருந்த ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.