districts

கொரோனா நோயாளி இல்லாத ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

சென்னை, ஏப். 12- மருத்துவ பணியாளர்களின் அனுப வத்தில் மறக்க முடியாதது கொரோனா காலம். சிகிச்சை பெற்றவர்களில் 96 சதவீதம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை தலைவர் தேரணி ராஜன் கூறினார். கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய முடியாமல் பிணங்கள் பல நாட்கள் வரிசை கட்டி நின்றன. சென்னையிலும் கொரோனா கட்டுப்படுத்த முடியாமல் கோர தாண்டவமாடியது என்றால் மிகையல்ல. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லாத நாளாக செவ்வாய்க்கிழமை (ஏப். 12) அமைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாயன்றுதான் கொரோனா நோயாளிகள் இல்லாத நாளாக மாறியுள்ளது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஒருவருக்கொருவர் கை குலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நாள் என்று வருமோ என ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்தோம். 2 ஆண்டுகள் 35 நாட்கள் இதற்காக காத்திருந்துள்ளோம் என்றார்கள் அவர்கள். இதுபற்றி மருத்துவமனை தலைவர் தேரணி ராஜன் கூறியதாவது: இந்த நாள் மிகவும் மகிழ்ச்சிகரமான நாள். அனைவரின் கடின உழைப்பு, கூட்டு முயற்சியால் இந்த நிலையை எட்டி இருக்கிறோம். இந்த நிலையை எட்டுவதற்காக கடந்து வந்த பாதையும், சந்தித்த சவால்களும் சாதாரணமானதல்ல. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதல் கொரோனா நோயாளி அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கிய கொரோனா நெருக்கடியில், மருத்துவ துறையினர் மிகப்பெரிய சவால்களை சந்தித்தோம். 65 ஆயிரம் பேருக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளோம். 100 வயதான கணவர் மற்றும் 94 வயதான அவரது மனைவி ஆகியோரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்கள். சிகிச்சை பெற்றவர்களில் 96 விழுக்காட்டினர் காப்பாற்றப்பட்டனர். 4 விழுக்காட்டினர் உயிரிழந்தனர். மருத்துவ பணியாளர்களின் அனுபவத்தில் மறக்க முடியாதது கொரோனா காலம். இவ்வாறு அவர் கூறினார்.