செங்கல்பட்டு, அக்.26- பட்டியல் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் அம்மக்களிடமே இருப்பதை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு இருளர் அடுக்குமாடி குடியிருப்பில் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தில் முதல் கையெழுத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா துவக்கி வைத்தார். ஐதராபாத்தில் கடந்த ஆகஸ்ட் 26,27 ஆகிய தேதிகளில் தேசிய தலித் உச்சி மாநாடு நடைபெற்றது. 25 மாநிலங்களில் இருந்து சமூக நீதிக்காக போராடும் 100 க்கும் மேற்பட்ட அமைப்புகள் மாநாட்டில் பங்கேற்றன. அம்மாநாட்டின் கோரிக்கை சாசனத்தை வருகிற டிசம்பர் 4 அன்று தலைநகர் டெல்லி யில் பேரணி நடத்தி குடியரசு தலைவரிடம் வழங்க உள்ளனர். இந்நிலையில் பொதுச் சொத்துக்களில் பட்டியலின மக்கள் உரிய பங்கினைப் பெற சட்டம் இயற்ற வேண்டும், நிலமற்ற கிராமப்புற மக்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்கிட வேண்டும், குழந்தைத் தொழிலாளர் முறைமையை அடியோடு ஒழித்திட வேண்டும், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1976 ஐ உறுதி யான முறையில் அமலாக்க வேண்டும், புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும், அரசாங்கம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு கொள்முதல், ஒப்பந்தங்கள், வணிகம் ஆகியவற்றில் உரிய பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும், இட ஒதுக்கீட்டை அமலாக்கிட வேண்டும், கல்வி நிலையங்களில் நிலவும் சாதிய ஒடுக்குமுறையை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கையெழுத்து இயக்கத்தில் வலியுறுத்த பட்டது.அனைத்திந்திய ஜனநாயகப் மாதர் சங்கத்தின் அகில இந்திய துணை செயலாளர்.பி.சுகந்தி, மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி, மாவட்ட துணைத் தலைவர் தமிழரசி, ததீஒமு மாவட்டப் பொருளாளர் அ.ராமலிங்கம், மக்கள் கண்காணிப்பகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர், மனித உரிமை செயற்பாட்டாளர். அ.மேத்யு உள்ளிட்ட பலர் இதில் உடனிருந்தனர்.