districts

img

ராக்கெட் தொழில்நுட்பத்தை சாமானிய மக்களுக்காக பயன்படுத்த நினைத்த விஞ்ஞானி

“ராக்கெட் உள்பட எவ்வளவு அதிநவீன தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் எதிரொலிக்கவில்லை என்றால், அந்த தொழில்நுட்பத்தால் எந்தப்  பயனும் இல்லை எனக் கருதியவர்  சதீஷ் தவன்” என தனது கட்டுரை யில் குறிப்பிடுகிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப் பேற்றுக் கொண்டார். அது மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டம் என்று தான் சொல்லவேண்டும். காரணம், இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை எனக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய், 1971 டிசம்பரில் காலமானார்.

விண்வெளித் துறையில் அடுத்த பத்தாண்டு களுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்திட்ட அறிக்கையை 1970ஆம் ஆண்டு ஜூலையில் ஒன்றிய அரசிடம் அளித்திருந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். அவரது திட்டங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சதீஷ் தவன். அந்த வகை யில், இந்திய விண்வெளி திட்டம் தொடர்பாக கனவு கண்டவர் விக்ரம் சாராபாய் என்றாலும் அதனை நடத்திக் காட்டியவர் சதீஷ் தவன். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவி யல் கழகத்தின் (IISc) இயக்குநர் என்ற பொறுப்பு டன், கூடுதலாக இஸ்ரோவின் தலைவர் பதவி யையும் அவர் வகித்தார். இஸ்ரோ தலைவர் பதவிக்கு அவர் பெற்ற மாதச் சம்பளம் வெறும் 1 ரூபாய். கடந்த 1972 முதல் 1984 வரை இஸ்ரோவின்  தலைவராக இருந்தார் சதீஷ் தவன். இவரது தலைமையில்தான் விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக மாறத் துவங்கியது. இஸ்ரோவில் அதிக ஆண்டுகள் தலைவராக இருந்தவரும் அவர் தான்.

விண்வெளித் துறை என்பதை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஒரு துறையாக மட்டும் பார்க்காமல், அதன் மூலம் சாமானிய மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் சதீஷ் தவன் அதிக ஆர்வம் செலுத்தினார் எனக் குறிப்பிடுகிறார் கஸ்தூரி ரங்கன். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பின்வருமாறு விவரிக்கிறார். “1976ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் ஒரு புதிய திட்டம் குறித்து உரையாற்றினார் சதீஷ் தவன். தொழில்நுட்பம் தொடர்புடைய ஒரு திட்டம் எப்படி லட்சக்கணக்கான பாமர மக்கள் மற்றும் பழங்குடி யினருக்கு பயன்படும் என்பதை அவர் விளக்கினார்.” “இலுப்பை, ஆமணக்கு,  வேம்பு போன்றவற்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து, பாலியோல் (Polyol)  எனப்படும் கரிமச் சேர்மத்தை உற்பத்தி செய்து, அதை  பெட்ரோலியப் பொருட்க ளின் உற்பத்திக்கு பயன்படுத்து வது.மேலும் இதன் மூலம் சுமார் 40 லட்சம் டன் நச்சுத்தன்மையற்ற, மக்கும் உரம் உபரிபொரு ளாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டது. அதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி துறை மிகப்பெரிய அளவில் பயனடையும்.” “இப்படிப்பட்ட திட்டம் நிறைவேறினால் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும், இயற்கையும் பாதுகாக்கப்படும் என  அவர் நம்பினார். ஆனால் பொருளாதார கார ணங்களுக்காக இத்திட்டம் கைவிடப்பட்டது”

“அதற்காக மிகவும் கோபப்பட்டார் சதீஷ் தவன். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு என்பது பொருளாதாரம் சார்ந்து தான்  இருந்தது, இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு  கிடைக்கும் பயன்கள் கணக்கில் எடுக்கப்பட வில்லை. அதனால் தான் இத்திட்டம் அரசால் கைவிடப்பட்டது என அவர் வருத்தப்பட்டார்.” இவ்வாறு தனது கட்டுரையில் விவரிக்கிறார் கஸ்தூரி ரங்கன். மேலும், “தனது எந்த உணர்ச்சிகளையும் எளிதாக அவர் வெளிப்படுத்த மாட்டார். எஸ்.எல்.வி. 3 (SLV 3) தோல்வியடைந்த போது தனது கவலையை வெளிகாட்டிக்கொள்ளாமல், நாம் சற்று தடுமாறிவிட்டோம் ஆனால் வீழவில்லை என்று கூறினார். அவர் கொடுத்த உற்சாகம் மற்றும் வழிகாட்டுதலால் தான் அடுத்த ஒரே  வருடத்தில் எஸ்.எல்.வி. 3 மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.” என்கிறார் கஸ்தூரி ரங்கன். செப்டம்பர் 25, 1920ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் சதீஷ் தவன் பிறந்தார். இந்திய அறிவியல் கழகத்தில் (IISc)  1951இல் பேராசிரியராக இணைந்து, பின்னர் 1962இல் அதன் இயக்குநராக உயர்ந்தார். பின்னர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில் 1972இல் இஸ்ரோ தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய, சீன விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வரிசையில் இஸ்ரோவும் இடம் பெற்றிருப்பதில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது (நன்றி பிபிசி தமிழ்)